
தாரக் சின்ஹா
71 வயதான தாரக் சின்ஹா நாட்டின் முக்கிய கிரிக்கெட் பயிற்சியாளர்களில் ஒருவர் ஆவர். இந்திய அணிக்காகப் பல தலைமுறை வீரர்களை இவர் கண்டறிந்து அளித்துள்ளார். சுமார் 50 ஆண்டுகளாக இளம் வீரர்களை மிகச் சரியாகக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து, பல சாதனைகளைப் படைக்க உதவியவர் தராக் சின்ஹா. டெல்லியின் சோனட் கிரிக்கெட் கிளப் நிறுவனரான தாரக் சின்ஹா, இந்திய அணிக்கு இதுவரை 12 வீரர்களைக் கொடுத்துள்ளார்.

சோனட் கிரிக்கெட் கிளப்
அவரது மறைவு குறித்து சோனட் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோனெட் கிளப்பின் நிறுவனர் தாரக் சின்ஹா, கடந்த இரண்டு மாதங்களாக நுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்தார். அவர் இன்று காலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய மற்றும் டெல்லி கிரிக்கெட்டுக்கு பல முக்கிய வீரர்களை வழங்கிய சொனட் கிரிக்கெட் கிளப்பின் ஆன்மாவாக அவர் இருந்தார். அவர் விரைவாகக் குணமடையப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று கூறப்பட்டுள்ளது.

50 ஆண்டுகள்
சிகே நாயுடு கோப்பைக்கான டெல்லியின் ஜூனியர் அணியில் அரசுப் பள்ளியில் படித்த சின்ஹாவால் இடம் பெற முடியவில்லை. இதனால் தன்னை போலத் திறமை இருந்தும் ஏழ்மையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவும் வகையில் அவர், 1969 இல் சொனட் கிரிக்கெட் கிளப்பை நிறுவினார். இந்த கிளப் மூலம் அவர் ஏழ்மையான நிலையில் இருக்கும் பல வீரர்களை உச்ச நட்சத்திரமாக்கியுள்ளார். இதனால் தான் பல கிரிக்கெட் வீரர்களும் கடைசி நாள் வரை அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து வந்தனர்.

முக்கிய வீரர்கள்
சுரிந்தர் கண்ணா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மா, அதுல் வாசன், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சீவ் சர்மா, ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவான், ரிஷப் பந்த் என வீரர்களை இளம் வயதிலேயே இனம் கண்டு பயிற்சி அளித்துள்ளார். இந்திய மகளிர் அணியில் பல முக்கிய சாதனைகளைப் படைத்த அஞ்சும் சோப்ராவும் இவரிடம் பயிற்சி பெற்றவரே. கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் துரோணாச்சார்யா விருதும் வழங்கப்பட்டது.

ரிஷப் பந்த் ட்வீட்
தாரக் சின்ஹாவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ரிஷப் பந்த், தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது வழிகாட்டி, பயிற்சியாளர், ஊக்குவிப்பாளர், எனது மிகப்பெரிய விமர்சகர் மற்றும் எனது மிகப்பெரிய ரசிகர். உங்கள் மகனைப் போல் நீங்கள் என்னைக் கவனித்துக்கொண்டீர்கள். உங்கள் இழப்பு எனக்குப் பேரிழப்பு. நான் மைதானத்திற்குள் வரும் போதெல்லாம் எப்போதும் நீங்கள் என்னுடன் இருப்பீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள் RIP தாரக் சார்" எனப் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications