லக்னோ : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலே அதிக விலைக்கு சென்ற வீரர் என்ற பெயரை ரிஷப் பண்ட் பெற்றார்.
இதுபோன்று 26 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் பஞ்சாப் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ், பஞ்சாப் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வரும் நிலையில் அந்த அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரிஷப் பண்ட், மெகா ஏலத்தில் பங்கேற்றார். அதே சமயம் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுலுக்கும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்காவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் லக்னோ அணியில் தொடர கே எல் ராகுல் விரும்பவில்லை என கூறியிருந்த நிலையில், தற்போது லக்னோ அணி ரிஷப் பண்ட்டை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எல்.எஸ்.ஜி. அணியின் உரிமையாளர் கோயங்கா ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக ரிஷப் பண்ட் இருக்கப் போகிறார். இன்னும் 10, 12 ஆண்டுகளில் நீங்கள் தோனி, ரோகித் சர்மா ஆகியோரின் பெயர்களுடன் ரிஷப் பண்ட் பெயரையும் பயன்படுத்துவீர்கள் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ரிஷப் பண்ட் விளையாடி வருகிறார். இதுவரை 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3,284 ரன்கள் அடித்திருக்கிறார். குறிப்பாக ஐபிஎல் 2018 ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் 684 ரன்கள் குவித்தார். இதில் மும்பை அணிக்கு எதிராக 128 ரன்கள் அடங்கும்.
இதேபோன்று ரிஷப் பண்ட் மூன்று சீசனில் 400 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். லக்னோ அணியில் ஏற்கனவே நிக்கோலஸ் பூரான், டேவிட் மில்லர் மிட்செல் மார்ஷ், ஏய்டன் மார்க்கரம் போன்ற வீரர்கள் உள்ள நிலையில் ரிஷப் பண்ட்டின் வருகை அந்த அணியை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.