பெங்களூர்: துலீப் டிராபியில் இந்தியா ஏ - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், பேட்டிங் செய்து கொண்டிருந்த எதிரணி வீரர் குல்தீப் யாதவிடம், "அம்மா சத்தியமா சொல்லு" என்று லந்து கொடுத்து விவகாரம் ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பி அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி முஷீர் கானின் அபார சதம் காரணமாக 321 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களை சேர்த்தது.

இதன் மூலமாக 2வது இன்னிங்ஸை 90 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா பி அணி தொடங்கியது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் சர்ஃபராஸ் கான் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் இந்தியா பி அணி 2வது இன்னிங்ஸில் 184 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து இந்தியா ஏ அணி வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
பின்னர் களமிறங்கிய இந்தியா ஏ அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் களத்தில் இருந்தனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து சென்றார். பின்னர் அவரும் 57 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், குல்தீப் யாதவ் - ஆகாஷ் தீப் கூட்டணி இணைந்து ரன்களை சேர்த்தது.
அப்போது குல்தீப் யாதவ் பேட்டிங் செய்த போது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட், அனைவரும் அருகில் வாருங்கள்.. குல்தீப் யாதவ் ஒரு ரன் எடுக்க முயற்சிப்பார் என்று சத்தமாக குரல் கொடுத்தார். இதனை கேட்ட குல்தீப் யாதவ் உடனடியாக ரிஷப் பண்ட் பக்கம் திரும்பி, நான் சிங்கிள் எடுக்க போவதில்லை என்று பதில் அளித்தார். அப்போது ரிஷப் பண்ட், அப்போது "அம்மா மீது சத்தியம் செய்" என்று ஜாலியாக கேட்டார்.
இதனால் இருவரும் களத்திலேயே சிரித்து கொண்டனர். அதேபோல் 4வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக கேப்டன் சுப்மன் கில் இந்தியா ஏ அணி வீரர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்த போது, எதிரணி வீரரான ரிஷப் பண்ட்-ம் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று ஜாலியாக இருந்தார். இந்த வீடியோவும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

வழக்கமாக சேட்டை செய்யும் வீரரான ரிஷப் பண்ட், கிரிக்கெட் களத்தில் ரசிக்கும் படியான சேட்டைகளை செய்வார். தற்போது பேட்டிங் ஃபார்முடன் சேர்த்து சேட்டையை ரிஷப் பண்ட் தொடங்கியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடியுள்ள ரிஷப் பண்ட், வங்கதேச டெஸ்ட் தொடர் மூலமாக இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.