
முதல் டெஸ்ட் போட்டி
50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட், வங்கதேச தொடரில் காயம் எனக்கூறி விலக்கிவைக்கப்பட்டார். இனி டெஸ்ட் கிரிக்கெட்டிலாவது சரிபட்டு வருவாரா? என சந்தேகப்பட்ட சூழலில் இன்று களமிறங்கினார். என்ன விமர்சனங்கள் வந்தாலும் சரி, நான் எனது அதிரடியை மட்டுமே காட்டுவேன் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

காப்பாற்றிய பண்ட்
48 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய ரிஷப் பண்ட் எவ்வித பதற்றமும் இன்றி வங்கதேச பவுலிங்கை வெளுத்து வாங்கினார். 45 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரனகளை விளாசினார். குறிப்பாக மெஹிடி ஹாசன் ஓவரில் தொடர்ச்சியாக சிக்ஸர், பவுண்டரி என அடித்தார். எனினும் அவரால் அரைசதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.

புதிய ரெக்கார்ட்
இந்நிலையில் இந்த அதிரடி மூலம் 2 புதிய சாதனையை பண்ட் படைத்தார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். எம்.எஸ்.தோனிக்கு பிறகு இதனை செய்யும் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான் ஆகும். இதுமட்டுமல்லாமல் சிக்ஸர்கள் அடிப்பதிலும் தோனி போன்ற ஜாம்பவான்களை முந்தியுள்ளார்.

2வது ரெக்கார்ட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். தோனி 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50 சிக்ஸர்களை அடித்த சூழலில் ரிஷப் பண்ட் 32 டெஸ்ட்களிலேயே சென்றுவிட்டார். இதே போல உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 சிக்ஸர்களை அடித்த 3வது வீரராக இடம்பெற்றுள்ளார்.

குவியும் வாழ்த்துகள்
பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி வெறும் 26 போட்டிகளில் 50 சிக்ஸர்களை அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா 30 போட்டிகளில் அதனை எட்டியிருந்தார். ரிஷப் பண்ட் 31 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications