மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் காலில் ஏற்பட்ட காயத்துடன் ரிஷப் பண்ட் அரைசதம் விளாசி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்களை விளாசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையோடு, ஒரே தொடரில் அதிக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்திருந்தது. இதன்பின் ஜடேஜா - ஷர்துல் தாக்கூர் கூட்டணி 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 2வது நாளில் 94 ரன்கள் கூடுதலாகச் சேர்த்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

காலில் ஏற்பட்ட காயத்துடன் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 54 ரன்களை எடுத்து அசத்தினார். ரிஷப் பண்ட்-ன் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் அரைசதம் விளாசியதன் மூலமாக பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 18வது சதம் இதுவாகும்.
அதேபோல் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக அரைசதங்களை விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதுவரை ஒரு டெஸ்ட் தொடரில் தோனி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோர் 4 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது ரிஷப் பண்ட் 5 முறை 50 ரன்களுக்கு மேல் விளாசி புதிய வரலாறு படைத்துள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் அடிக்கும் 9வது அரைசதம் இதுவாகும். இதுவரை வெளிநாட்டு விக்கெட் கீப்பர்களில் தோனி 8 அரைசதங்களை இங்கிலாந்து மண்ணில் விளாசியதே சாதனையாக இருந்தது. தோனியின் இந்த சாதனையையும் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு விக்கெட் கீப்பராக இங்கிலாந்து மண்ணில் ஒரே தொடரில் அதிக ரன்களை ரிஷப் பண்ட் விளாசி இருக்கிறார்.
இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸில் ஆடியுள்ள ரிஷப் பண்ட் 2 சதங்கள், 3 அரைசதங்கள் உட்பட 479 ரன்களை விளாசி இருக்கிறார். இதற்கு முன்பாக 1998ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ஸ்டீவர்ட் 464 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது. இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேமி ஸ்மித் 415 ரன்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். இதனால் ரிஷப் பண்ட் ஜாம்பவான் அந்தஸ்தைப் பெற்று வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.