பெர்த்: ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத சரித்திர சாதனையை படைத்து இருக்கிறார் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் இந்திய வீரர்களிலேயே ஓரளவு சிறப்பாக ஆடி 78 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இருந்தார்.
இதன் மூலம் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் மட்டும் 2034 ரன்கள் சேர்த்து, 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2000 ரன்களை எட்டிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார்.

இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் மற்றும் நியூசிலாந்து அணியின் டாம் லாதம் ஆகியோரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2000 ரன்களை எடுத்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் அணியின் விக்கெட் கீப்பர்களாக அதிக அளவில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒல்லி போப் 4 இன்னிங்ஸ்களிலும், டாம் லாதம் ஒரு இன்னிங்ஸிலும் மட்டுமே விக்கெட் கீப்பராக விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் விக்கெட் கீப்பராக மட்டுமே ரிஷப் பண்ட் 2000 ரன்களை எட்டி மாபெரும் வரலாற்று சாதனை படைத்து இருக்கிறார்.
மேலும், இந்திய அணிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் 2000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 2685 ரன்களும், விராட் கோலி 2432 ரன்களும், ரிஷப் 2034 ரன்களும் குவித்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அறிமுக வீரரான நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி மோசமாக விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 83 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.