இடம் பிடிக்க போராட்டம்
இந்திய அணியில் தற்போது மூன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் தோனியின் இடம் மட்டுமே உறுதி ஆகி உள்ளது. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரும் அணியில் இடம் பிடிக்க போராடி வருகின்றனர்.
பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்
அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தான் உலகக்கோப்பை அணியில் இவர்களில் யாரின் இடம் உறுதி என்பது தெரிய வரும். ஆனால், ஷேன் வார்னே விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என ரிஷப் பண்ட்-ஐ பார்க்க வேண்டாம் என்கிறார்.
துவக்க வீரராக பண்ட்
ரிஷப் பண்ட் ஆடுவது குறித்து பல பேச்சு இருக்கிறது ஆனால், அணியில் தோனி, பண்ட் இருவருமே ஆடலாம். ரிஷப் பண்ட் கீப்பராக இல்லாமல், பேட்ஸ்மேனாக ஆடலாம். ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக கூட இறங்கலாம் என்கிறார் வார்னே.
எதிரணியை திணற வைக்கும்
தவான் சிறப்பாக ஆடினாலும், ரிஷப் பண்ட் துவக்கத்தில் இறங்கினால், அது இந்திய அணிக்கு நன்றாக இருக்கும். இது போன்ற வியூகங்கள், ஆச்சரிய மாற்றங்கள் எதிரணியை திணற வைக்கும் என்கிறார் ஷேன் வார்னே.
ஐபிஎல் தொடரில் பண்ட்
ரிஷப் பண்ட் அதிரடி பேட்ஸ்மேன் என்பதால், வார்னே கூறுவது நல்ல யோசனை தான். ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக ஆடியுள்ளார். ஆனால், இப்படி ஒரு யோசனை இந்திய அணி நிர்வாகத்திற்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
பரிசோதனை செய்ய வேண்டும்
ஒருவேளை கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் ரிஷப் பண்ட்டை மாற்று துவக்க வீரராக பயன்படுத்த எண்ணினால், ஆஸ்திரேலிய தொடரில் அவரை துவக்க வீரராக களம் இறக்கி பார்க்க வேண்டும். அந்த பரிசோதனையில் வெற்றி கிடைத்தால், உலகக்கோப்பை அணியில் பண்ட்டை துவக்க வீரராக இறக்கலாம்.
மனது வைப்பாரா கோலி?
இது போன்ற திடீர் அணி மாற்றங்கள் சில சமயம் பெரிய அளவில் பயன் அளிக்கும் என்றாலும் கோலி மனது வைத்தால் மட்டுமே இந்த அதிரடி முயற்சிகள் இந்திய அணியில் நடக்கும். மனது வைப்பாரா கோலி?