டி20 தொடரில் ரிஷப் பண்ட்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் பங்கேற்காத ரிஷப் பண்ட் டி20 தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கலக்கிய ரிஷப் பண்ட்டை இந்த தொடரில் நிச்சயம் ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறினார்.
தோனிக்கு பதில் ரிஷப்?
தோனிக்கு ஓய்வு அளித்து விட்டு ரிஷப் பண்ட்டை இந்த டி20 தொடரில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக பயன்படுத்த வேண்டும் என யோசனை கூறினார் கவாஸ்கர். ரிஷப் பண்ட் 4 அல்லது 5வது இடத்தில் இறங்கி பொறுப்பாக பேட்டிங் செய்கிறாரா? என பரிசோதிக்க வேண்டும் என்கிறார் அவர்.
இடது கை பேட்ஸ்மேன் அவசியம்
உலகக்கோப்பையில் கூடுதல் இடது கை பேட்ஸ்மேன் அணியில் அவசியம் தேவை என்ற நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு இந்த டி20 தொடரில் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் எனவும், அதே போல அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் அவரை ஆட வைக்க வேண்டும் எனவும் கவாஸ்கர் தெரிவித்தார்.
அப்ப தினேஷ் கார்த்திக்?
தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் இருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் நிலை என்ன? என்ற கேள்வி உள்ளது. கோலி, ரவி சாஸ்திரி தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷர் என்ற அளவில் ஆறாவது பேட்ஸ்மேனாக பயன்படுத்த எண்ணி இருக்கும் நிலையில், கவாஸ்கர் அவரை மாற்று துவக்க வீரராக அணியில் வைத்துக் கொள்ளலாம் என வித்தியாசமான யோசனை ஒன்றையும் கூறியுள்ளார்.
மூன்று விக்கெட் கீப்பர்கள் தேவையா?
இந்திய அணியில் எப்போதும் இல்லாத வகையில் மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் களம் இறங்குவதில்லை என்றாலும், இது அவசியமா? என சிலர் கேட்டு வருகின்றனர். தோனி தான் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார் என்பது உறுதியான நிலையில், மற்ற இருவரும் பேட்ஸ்மேன் என்ற அளவிலேயே அணியில் இடம் பிடித்து வருகின்றனர்.