Rishabh Pant-பல்டி அடிக்க சொன்ன கவாஸ்கர்.. பண்ட் கொடுத்த ரியாக்சன்.. சாதனை சதத்திற்கு பின் சுவாரஸ்யம்
லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் இத்தகைய சாதனையை இங்கிலாந்து மண்ணில் படைத்த முதல் இந்தியர் இவர் ஆவார்.
உலக அளவில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்று பல்வேறு பெருமைகள் ரிஷப் பண்ட்க்கு தற்போது சேர்ந்திருக்கிறது.(முதல் விக்கெட் கீப்பர் ஜிம்பாப்வே வீரர் ஆண்டி பிளேவர் ஆவார்)

அது மட்டுமில்லாமல் டிராவிட்டுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை தற்போது பண்ட் படைத்திருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே பண்ட் தன்னுடைய அதிரடி ஆக்ரோஷ ஆட்டத்தால் ரன்களை சேர்ப்பது மட்டுமல்லாமல் எதிரணியின் பவுலர்களுக்கு தூங்கா இரவுகளை பரிசளிப்பார்.
ஒரு காலத்தில் எப்படி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் விளையாடினாரோ அதை கண்முன் காட்டும் வகையில் பண்ட், ரன்களை சேர்த்து வருகிறார். இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் பண்ட் பெரிய அளவு சாதிக்கவில்லை. இதனால் ரிஷப் பண்டை அப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் Stupid என்று திட்டினார்.
ஆனால் தற்போது அதே கவாஸ்கரை இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய ரசிகராக பண்ட் மாற்றிவிட்டார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த போதே ரிஷப் பண்டை பாராட்டிய கவாஸ்கர், இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் சதம் அடித்தவுடன் மைதானத்தில் நின்று அவருக்கு பாராட்டினார். மேலும் பல்டி அடித்து கொண்டாடு என்று சைகையில் அவர் காட்டினார்.
அதற்கு ரிஷப் பண்ட் தற்போது வேண்டாம் அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்வோம் என்று சைகை காட்டி பதிலாக சொன்னார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. யார் தம்மை திட்டினாரோ அவரே தற்போது பாராட்டும் அளவுக்கு தன்னுடைய பேட்டிங்கை மாற்றி பண்ட் சாதித்து இருக்கிறார் என்று பலரும் அவரை கொண்டாடி வருகின்றனர். பண்டின் சதம் மூலம் இந்திய அணி தேநீர் இடைவெளியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் 75 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 304 ரன்கள் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications