பெங்களூரு: கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கியிருந்த ரிஷப் பண்ட் நடக்கவே முடியாமல் இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டி ஒன்றில் டவுன் தி டிராக் இறந்து சிக்சர் அடித்துள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். 24 வயதிலேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா என்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் எல்லாம் சதங்களை விளாசி அசத்தியவர். இதனால் இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால கேப்டன் என்ற இடத்தில் ரிஷப் பண்ட் பார்க்கப்பட்டார்.

ஆனால் புத்தாண்டுக்கு முன்பாக நெடுஞ்சாலை விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கிக் கொண்டார். இதனால் அறுவை சிகிச்சை, ஓய்வு என்று ரிஷப் பண்ட் எப்போது மீண்டும் கிரிக்கெட் களம் திரும்புவார் என்றே தெரியாமல் இருந்தது. ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்ததால், இந்த ஆண்டில் கிரிக்கெட் திரும்ப வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்டது.
இதனிடையே யாரின் உதவியும் இல்லாமல் ரிஷப் பண்ட் நடந்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டார். அதுமட்டுமல்லாமல் உடனடியாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் சென்றார். அங்கு ஏற்கனவே காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருடன் ரிஷப் பண்ட்-ம் இணைந்து கொண்டார்.

ஒவ்வொரு நாளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த ரிஷப் பண்ட் வேகமாக மீண்டு வந்தார். இதனிடையே அடுத்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவதும் சந்தேகம் என்று இஷாந்த் சர்மா கூறினார். இதனால் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் பிசிசிஐ தரப்பில், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை தொடங்கிவிட்டதாக அப்டேட் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து ரிஷப் பண்ட் 140 கிமீ வேகத்தில் த்ரோ டவுன் செய்யப்படும் பந்துகளை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பயிற்சி போட்டியில் களமிறங்கும் ரிஷப் பண்ட், வேகப்பந்துவீச்சாளர் வீசும் பந்து ஒன்றை டவுன் தி டிராக் இறங்கி வந்து சிக்சர் அடிக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் டெஸ்ட் அணியில் நீடித்து வரும் விக்கெட் கீப்பர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.