ரிஷப் பண்ட்
தோனி 2018இல் பேட்டிங்கில் தடுமாறினார். அதே காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் காயமடைந்த சாஹாவிற்கு மாற்று வீரரை தேடி வந்த இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பிடித்தார் ரிஷப் பண்ட். அப்போது முதலே அவர் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவியது.
தோனி ஒப்பீடு
அப்போதே அவரை தோனியுடன் ஒப்பிட்டு பேசி வந்தனர். தோனி பேட்டிங் சரியில்லை என்பதால் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. ரிஷப் பண்ட் தோனி அணியில் இருந்த போதே மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். சில போட்டிகளிலும் ஆடினார்.
பார்ம் அவுட்
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் அணியில் இடம் பெறாத நிலையில் தொடர்ந்து இந்திய அணியில் ஆடி வந்த அவர் பேட்டிங், விக்கெட் கீப்பிங் இரண்டிலும் பார்ம் அவுட் ஆனார். அதை அடுத்து கேஎல் ராகுல் அணியின் விக்கெட் கீப்பராக மாறினார்.
இரண்டாம் கட்ட வீரர்
ரிஷப் பண்ட் தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இடம் பெற்று வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் கூட சாஹா மீண்டும் வந்து விட்டார். அதிக எதிர்பார்ப்புடன் வலம் வந்த பண்ட் இரண்டாம் கட்ட வீரராக மாறினார்.
ரிஷப் பண்ட் நிலை
ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தது பெரிய சாதனையாக உள்ளது. எந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் செய்யாத சாதனை அது. அது போன்ற சில விஷயங்கள் மட்டுமே பண்ட்டுக்கு சாதகமாக உள்ளன.
எம்எஸ்கே பிரசாத் என்ன சொன்னார்?
இந்த நிலையில், முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ரிஷப் பண்ட், தோனியை பார்த்து காப்பி அடித்ததால் தான் அவரது நிலை மோசமானது என குறிப்பிட்டு இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது - ரிஷப் பண்ட் அணியில் ஆட வந்தது முதல் தோனியுடன் ஒப்பிடப்பட்டு வந்தார்.
பரவச நிலையில் பண்ட்
அந்த ஒப்பீடுகளில் மூழ்கி ஒரு பரவச நிலையை அடைந்தார். அதில் இருந்து அவர் மீள வேண்டும் என நாங்கள் பல முறை அவருக்கு கூறினோம். தோனி முற்றிலும் வேறு ஒரு வீரர். நீங்கள் அவரிடம் இருந்து மாறுபட்டவர். உங்களுக்கும் திறமை உள்ளது. அதனால் தான் உங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவரிடம் கூறினோம்.
காப்பி அடித்தார்
அவர் எப்போதும் தோனியின் நிழலிலேயே இருந்தார். தன்னை அவருடன் ஒப்பிட்டு வந்தார். அவரை அப்படியே "காப்பி அடித்து" பின்பற்றத் துவங்கினார். தோனியின் நடை, உடை, பாவனைகளை கூட பின்பற்றினார். அவர் எல்லாவற்றையும் செய்தார்.
நம்பிக்கை
அவரைப் பொறுத்தவரை நல்ல வேளையாக தோனி இப்போது ஓய்வு பெற்று விட்டார். நிச்சயம் பண்ட் அவரது நிழலில் இருந்து வெளியே வருவார் என்று நம்புகிறேன். அதில் இருந்து வளர்ந்து இன்னும் இன்னும் சிறந்த வீரராக மாறுவார்.
திறமை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணிலும் டெஸ்ட் சதம் அடித்த ஒரே வீரர். ஒருவர் அதை செய்கிறார் என்றால் அவரிடம் திறமை உள்ளது என்று அர்த்தம் என்று கூறினார் எம்எஸ்கே பிரசாத்.