பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் களமிறக்கப்படுவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவரது பேட்டிங் ஃபார்ம் விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்திய அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி விளையாடவுள்ளது. செப்.19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியும், செப்.27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி தங்களின் ஹோம் சீசனை தொடங்கவுள்ளது.

ஹோம் சீசனுக்கு தயாராகும் வகையில் பேக் அப் வீரர்களை தயார் செய்யும் வகையிலும் பிசிசிஐ தரப்பில் துலீப் டிராபி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சீனியர் வீரர்கள் சிலர் துலீப் டிராபியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி இருந்தாலும் நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பின் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.
ஏனென்றால் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் சுமார் 1.5 ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல் தொடரில் களமிறக்கப்பட்டார். சிறப்பாக விளையாடினாலும், ரிஷப் பண்ட் முழு திறனையும் வெளிப்படுத்தவில்லை. எந்தவொரு ஆட்டத்திலும் கடைசி வரை களத்தில் இருந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரிஷப் பண்ட் ஃபார்ம் கேள்விக்குறியானது.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்புவதற்கு முன்பாக ரிஷப் பண்ட் பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ரிஷப் பண்ட் துலீப் டிராபி தொடரில் இந்தியா பி அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் ரிஷப் பண்ட் விளையாடி தயாராகி வந்தார்.
இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணியை எதிர்த்து இந்தியா பி அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்தியா பி அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஒரு பக்கம் முஷீர் கான் நிதானமாக விளையாட, இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் களம் புகுந்தார்.
ரிஷப் பண்ட்-க்கு என்றே உருவாக்கப்பட்ட தருணமாக இது அமைந்தது. ஏனென்றால் இதுபோன்ற சூழல்களில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடுவார். ஆனால் ரிஷப் பண்ட் வந்ததும் ஆகாஷ் தீப் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். காலை முதலே 135 கிமீ வேகத்தில் இருந்து ஆகாஷ் தீப் குறையாமல் பவுலிங் செய்ய, ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட தீவிரமாக இருந்தார்.
அதற்கேற்ப ஆகாஷ் தீப் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கியடிக்க ரிஷப் பண்ட் முயற்சித்த போது, அது மிட் ஆன் திசையில் மேலே சென்றது. இதனை பார்த்த சுப்மன் கில் பின் பக்கமாக ஓடி சென்று பாய்ந்து அபாரமாக கேட்சை பிடித்தார். இதனால் ரிஷப் பண்ட் பரிதாபமாக 7 ரன்களில் வெளியேறினார். நீண்ட நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பிய ரிஷப் பண்ட் ஏமாற்றியது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.