“நினைத்ததை விட பெருசா இருக்கே”.. ரிஷப் பண்ட்-ன் புதிய உடல்நிலை அப்டேட்.. இனி 2023ல் சந்திக்கலாம்!
மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை மற்றும் எப்போது திரும்ப வருவார் என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டேராடூன் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சைபெற்று வந்த ரிஷப் பண்ட், சமீபத்தில் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கோகிலா பென் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு மருத்துவமனையின் மருத்துவக்குழு மற்றும் பிசிசிஐ-ன் மருத்துவக்குழு இணைந்து பண்ட்-ன் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

பெரிய காயம்
ரிஷப் பண்ட்-க்கு எந்தவித எலும்பு முறிவும் ஏற்படவில்லை என்றாலும் காலில் மூட்டுப்பகுதியிலும், கணுக்கால் பகுதியிலும் தசைநார்கள் கிழிந்துள்ளன. அதற்காக 2 அறுவை சிகிச்சைகளையும் செய்தே தீர வேண்டும். ஆனால் எதிர்பார்த்ததை விட தசைநார் கிழிவு பெரிதாக இருப்பதால், வெகு சீக்கிரம் குணமடைவார் என எதிர்பார்க்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

என்ன பாதிப்பு
பொதுவாக தசைநார் கிழிவு ஏற்பட்டால் ஒருவர் அறுவை சிகிச்சைப்பெற்று குணமடைய 6 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இவருக்கு காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதாலும், 2 இடங்களில் அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதால் குணமடைய 10 மாதங்களுக்கும் மேல் ஆகும் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மருத்துவர்கள் நிதானம்
எனினும் அறுவை சிகிச்சைகள் உடனடியாக செய்யப்படவில்லை. உடலில் உள்ள அனைத்து காயங்களும் நன்கு சரியானவுடன், விமானத்தில் பயணிக்கலாம் என்ற நிலைமை வந்தவுடன் அறுவை சிகிச்சைகள் நடைபெறவுள்ளன. ஒருவேளை பண்ட் விருப்பப்பட்டால் மும்பையிலேயே இதனை செய்யலாம். ஆனால் லண்டனுக்கு செல்ல பிசிசிஐ-தான் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

முக்கிய தொடர்கள்
ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரையெல்லாம் தவறவிடுவார் எனக்கூறப்பட்டு வந்த சூழலில் இந்தாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை, உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களிலும் விளையாட வாய்ப்பில்லை. எனவே இனி அவரை 2023ம் ஆண்டு இந்திய அணிக்குள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications