லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் இத்தகைய சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற ரெக்கார்டை பண்ட் படைத்திருக்கிறார்.
கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்தில் விளையாடிய நிலையில் பண்ட் மட்டும்தான் இத்தகைய சாதனையை செய்திருக்கிறார். 6 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நான்கு ரன்களிலும், சாய் சுதர்சன் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 90 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கில் இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த சூழலில் கே எல் ராகுலுடன் பண்ட் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். இருவரும் இங்கிலாந்துக்கு தண்ணி காட்டினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறினர். முதலில் 83 பந்துகளில் பண்ட், அரை சதம் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரை சதம் மேல் அடித்த வீரர் என்ற சாதனையை பண்ட் படைத்தார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பண்ட் 130 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 13 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் படைத்தார்.
அது மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இத்தகைய சாதனையை ஆண்டி பிளவருக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து பண்ட் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற ரெக்கார்டை படைத்திருக்கின்றார்.
இதேபோன்று வெளிநாட்டு மண்ணில் ஒரே டெஸ்டில் இரண்டு சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் படைத்திருக்கிறார். விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலிக்கு பிறகு பண்ட் இந்த சாதனையை படைத்துள்ளார்.