2015ல் முதல் போட்டி
இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் கருதப்பட்டாலும், சஞ்சு சாம்சனும் அந்த போட்டியில் இணைந்துள்ளார். பந்த் தன்னுடைய ஆட்டங்களில் சொதப்பும்போது, சஞ்சு சாம்சனுக்கு அந்த இடத்திற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கடந்த 2015ல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற டி20 போட்டியில் சாம்சனுக்கு முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் 24 பந்துகளுக்கு 19 ரன்களை அவர் அடித்தார்.
பல வாழ்க்கை படிப்பினைகள்
ஆனால் இந்த போட்டிக்கு பிறகு அடுத்த சர்வதேச வாய்ப்பிற்காக அவர் 5 வருடங்கள் காத்திருக்க வேண்டியது இருந்தது. இடையில் ஐபிஎல் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடி வந்தார். ரிஷப் பந்த் போட்டிகளில் சொதப்பியபோதெல்லாம் சஞ்சு சாம்சனுக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு காணப்பட்டது. இதனிடையே இந்த 5 ஆண்டுகள் இடைவெளி, தன்னுடைய வாழ்க்கையில் பல படிப்பினைகளை கற்றுக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியதாக சாம்சன் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பந்த் குறித்து சாம்சன்
ஐபிஎல் போட்டிகளில் தானும் ரிஷப் பந்த்தும் இணைந்து டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடியதாகவும் தாங்கள் இருவரும் இணைந்து பல போட்டிகளில் விளையாடி சிறந்த நண்பர்களாக இருந்ததாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த்தும் தானும் இந்திய அணியில் எந்த நிலைக்காகவும் போட்டியிட வில்லை என்றும் சஞ்சு சாம்சன் மேலும் கூறியுள்ளார்.
சிறந்த மூளைக்காரர் தோனி
இதனிடையே முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம்எஸ் தோனியிடமிருந்து தான் அதிகமான டிப்ஸ்களை கற்றதாகவும் அவரின் இரண்டு போட்டிகளை டிவியில் பார்த்தாலே அதிகமாக கற்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். உலகிலேயே அவர் சிறந்த மூளைக்காரர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல எவ்வாறு அவர் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றுகிறார் என்பதும் நெருக்கடி நேரத்திலும் எவ்வாறு அமைதியாக இருக்கிறார் என்பது குறித்தும் தான் தோனியிடம் கற்றதாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார்.