லண்டன்: இந்திய அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவரால் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான விஷயம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி ஜூலை 10 அன்று தொடங்கியது. இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸின் 34வது ஓவரை பும்ரா வீசினார். அவர் வீசிய பந்து வேகமாக வந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் அந்த பந்தை அடிக்க முயன்று தொட முடியாமல் விட்டார். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்தைக் கேட்ச் பிடிக்க தாவினார். அப்போது பந்து அவரது இடது கை ஆள்காட்டி விரலில் பட்டது. அதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டு அவர் வலியால் துடித்தார்.

உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஆடுகளத்திற்குள் வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்க முயன்றார். ஆனால், அவரால் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்குப் பதிலாக மாற்று விக்கெட் கீப்பரான துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
இதனிடையே ரிஷப் பண்ட்டுக்கு என்ன ஆனது? அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியுமா? இந்தப் போட்டியில் பங்கேற்க முடியுமா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. இந்த நிலையில், பிசிசிஐ இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட்டின் இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருக்கிறார். துருவ் ஜுரல் இப்போது ரிஷப் பண்ட்டின் இடத்தில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார்" என விளக்கம் அளித்துள்ளது. அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா என பிசிசிஐ கூறவில்லை.
இந்த நிலையில் தான், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் உசேன் இது பற்றி மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ரிஷப் பண்ட்டின் ஆள்காட்டி விரலில் இருக்கும் நகம் பெயர்ந்து இருப்பதாக அவர் கூறினார். இதுபோல நகம் பெயர்ந்தால் அதனால் கடுமையான வலி ஏற்படும். அந்தக் காயம் ஏற்பட்ட விரலை வலி இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஆகும்.
அந்தக் காயத்துடன் ஒரு வீரர் விளையாடுவது என்பது அவரது பேட்டிங் திறனை நிச்சயம் பாதிக்கும். எனினும், ரிஷப் பண்ட் நினைத்தால் பேட்டிங் செய்யலாம். அதே சமயம், அவரால் தனது முழு பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வி உள்ளது. ஏனெனில், இது ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி. அதில் முதல் நாள் ஆட்டத்தில் 34 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும், ரிஷப் பண்ட் இனி இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய வேண்டும். அத்துடன் விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்ள வேண்டும். நகம் பெயர்ந்த நிலையில் அவரால் இத்தனை பணிச்சுமையை ஏற்க முடியுமா? அந்த வலியை தாங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் இருந்து பாதியில் விலகினால், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வதுடன் பேட்டிங்கும் செய்வார். அவர் மாற்று வீரராக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். ஐசிசி விதியில் அதற்கு அனுமதி உள்ளது. இது குறித்து என்ன நடக்கும் என இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போதுதான் நமக்குத் தெரியவரும்.