மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விபத்தின் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த நிலையில் ரிஷப் பண்டின் உடல் தகுதியை கண்காணித்த பிசிசிஐ அவருக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தது.

இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் தங்கி இருந்த ரிஷப் பண்ட் தனது உடல் தகுதியை மீட்கும் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தற்போது ரிஷப் பண்ட், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். பண்டின் பேட்டிங்கில் எந்த குறையும் இல்லை. ஆனால் களத்தில் ஓடுவது மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற சில பிரச்சனைகள் மட்டுமே அவருக்கு இருக்கிறது.
அது குணமடைய இன்னும் சில காலம் ஆகலாம் என தெரிகிறது. தற்போது பண்டை இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளதால் அதற்குள் ரிஷப் பண்டை முழு உடல் தகுதியை எட்ட வைத்து விடலாம் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது .
அதற்கு முன்பு ரிஷப் பண்ட், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஒருவேளை அந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டால் விளையாட முடியவில்லை என்றால் ஐபிஎல் போட்டியில் பண்ட் திரும்புவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இன்னும் நான்கு மாதம் இருப்பதால் ரிஷப் பண்ட், கண்டிப்பாக அதில் விளையாட இந்த தடையும் இல்லை என தெரிகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் தனக்கென ஒரு பெயரை பெற்றிருக்கிறார். இதனால் அந்தத் தொடருக்கு திரும்புவதற்காக 100% ரிஷப் பண்ட் உழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பண்ட் குறித்து பேசிய கங்குலி ஐபிஎல் தொடரில் பண்ட் கண்டிப்பாக திரும்புவார் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.