லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஏழாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு தோனி ஆறு சதம் அடித்திருந்த நிலையில் பண்ட் சாதனையை முறியடித்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பந்த் இங்கிலாந்து மண்ணில் மட்டும் மூன்று சதமும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய மண்களில் தலா ஒரு சதமும் அடித்து இருந்தார்.

இது மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் 90களில் ஏழு முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், இந்தியா உருவாக்கியதிலே சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அது ரிஷப் பண்ட் தான் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மற்றவர்களை விட பண்ட் தான் மிக சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இந்தியாவில் இருக்கின்றார். அவர் 90 ரன்கள் எட்டிய பிறகு எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஏனென்றால் எட்டாவது முறையாக 90களில் ஆட்டம் இழந்து விடுவாரோ என்று நான் பயந்தேன்.
தொடர்ந்து பலமுறை அவர் 90 ரன்களை கடந்த நிலையில் ஆட்டம் இழந்து இருக்கிறார். தற்போது சதம் அடித்திருப்பது அவருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கும். அவர் ஆட்டம் இழந்த பிறகு பெவிலியன் நோக்கி சென்ற போது பேட்டை உயர்த்தினார். அப்போது பல இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்காக கைதட்டினார்கள்.
இதுதான் இங்கிலாந்து ரசிகர்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை பார்ப்பதற்காக தான் மைதானத்திற்கு வருகிறார்கள். தங்களது அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் எதிர் அணியில் சில வீரர்கள் அபாரமாக விளையாடினால் நிச்சயம் அதனை பாராட்டுவார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 6 சதம் அடித்திருந்த நிலையில், தற்போது அதனை பந்த் முறியடித்திருக்கிறார். இதேபோன்று விக்கெட் கீப்பராக களம் இறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழு சதம் அடித்து சங்ககாராவின் சாதனையும் பந்த் சமன் செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்த் 3000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அதிவேகமாக டெஸ்டில் 3000 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை அவர் முறியடித்து இருந்தார்.