ரிஷப் பண்ட் செய்த செயல்.. நள்ளிரவில் உத்தரகாண்ட் முதல்வருக்கு ட்வீட்.. நிலம் வாங்க உதவ கோரிக்கை
டெல்லி: இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் நேற்று இரவு அதிரடியாக உத்தரகாண்ட் மாநில முதல்வரிடம் உதவி கேட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தனது சொந்த மாநிலமான உத்தரகாண்டில் வீடு கட்ட நிலம் கிடைக்கவில்லை என்றும், அதற்கு உதவுமாறும் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு ரிஷப் பண்ட் நள்ளிரவில் எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்தார்.
தற்போது இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள பண்ட், அதற்கு முன் கொழும்பில் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், இரவில் பண்ட் இத்தகைய பதிவை வெளியிட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரருக்கே சொந்த மாநிலத்தில் நிலம் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அவரது கணக்கு ஏதேனும் ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

தற்போது டெல்லியில் வசிக்கும் ரிஷப் பண்ட், அங்கிருந்து தனது இருப்பிடத்தை சொந்த மண்ணான உத்தரகாண்டிற்கு மாற்ற விரும்புவதாகவும், ஆனால் உத்தரகாண்டில் நிலம் வாங்க முடியவில்லை எனவும் கூறி இருக்கிறார். "எனது சொந்த மக்களுக்கு அருகில் வாழ விரும்புகிறேன். இதற்காக டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு மாற நிலம் வாங்க முயன்றேன். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல், நிலம் வாங்குவது ஒரு கெட்ட கனவாகவே மாறிவிட்டது. அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலையிலேயே நிலத்தை வாங்கத் தயாராக உள்ளேன். தயவுசெய்து நிலம் பெற உதவி செய்யுங்கள்" என்று முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முன்பு உத்தரகாண்ட் மாநிலத்துக்காக விளம்பரம் செய்ததற்காக அரசு சார்பில் நிலம் தருவதாகக் கூறப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள பண்ட், தனது சொந்த மாநிலத்தில் முதல் வீட்டைக் கட்ட முதலமைச்சர் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகாண்டை பூர்வீகமாக கொண்ட ரிஷப் பண்ட், டெல்லி அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்குத் தேர்வானவர். 2025-26 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ. 23.84 கோடி வரி செலுத்தி, அம்மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராக பண்ட் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
