மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி கேப்டன் ரிஷப் பண்ட் காயமடைந்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியது.
துருவ் ஜூரல் மட்டும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய ஏ அணி 255 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணியில் கேப்டன் மார்க்கஸ் அக்கர்மேன் 134 ரன்கள் எடுக்க அந்த அணி 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து 34 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. அபிமன்யு ஈஸ்வரன் முதல் இன்னிங்ஸ் போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 23 ரன்களில் ஆட்டமிழக்க, தேவுதட் படிக்கல் 24 ரன்கள் எடுத்தார்.
78 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 26 ரன்கள் என்ற ஸ்கோருடன் விளையாடிய ராகுல் மூன்றாவது நாளில் வெறும் 1 ரன் மட்டுமே மேலும் சேர்த்து, 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார். வழக்கம் போல் அதிரடியாக ஆட முயற்சி செய்த ரிஷப் பண்ட் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
பண்டை கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள் ஷார்ட் பால் யுத்தியை பயன்படுத்தினர். இதனால் பண்ட், தலை வயிறு என பந்தால் அடி வாங்கினார்.இதை அடுத்து வலியால் துடித்த பண்ட் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். இதனால் மீண்டும் பேட்டிங் செய்ய வருவாரா அவருடைய காயம் எந்த நிலையில் இருக்கிறது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பின்பு தான், ரிஷப் பண்ட் 3 மாத ஓய்வுக்கு பின் மீண்டும் இந்தப் போட்டிக்கு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரிஷப் பண்ட் மீண்டும் காயமடைந்துள்ளதால் தென்னாபிரிக்காவுக்கு எதிராக வரும் 14ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது 40 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருக்கிறது. இது தென்னாபிரிக்காவின் ஸ்கோரை விட 151 ரன்கள் கூடுதலாகும்.