மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து வெளியேறிய ரிஷப் பண்ட் அதன்பின் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.
ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி என மற்றும் மூன்று தொடர்களை பண்ட் தற்பொழுது மிஸ் செய்திருக்கிறார். இந்த நிலையில் ரிஷப் பன்ட் எப்போது களத்திற்கு திரும்புவார் என்ற தேதியை தற்போது பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவிக்கையில் அக்டோபர் 10ஆம் தேதி ரிஷப் பண்டிற்கு ஒரு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர் முழு உடல் தகுதியை பெற்று விட்டாரா என்பது தெரியவரும். அதன் பின்பு அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பண்ட் குறித்து எந்தவித ரிஸ்க்கும் எடுக்க பிசிசிஐ முன்வரவில்லை. இந்த நிலையில் டெல்லியில் வரும் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெறும் ரஞ்சிப் போட்டியில் பண்ட் விளையாடுவார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் மருத்துவக் குழு பண்டை சோதித்து சான்றிதழ் அளித்தால்தான் அந்தப் போட்டிகளில் அவர் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 நாளாக பண்ட் கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். உடல் தகுதியை மீட்க அவர் தீவிரமாக உழைத்து வரும் நிலையில் வரும் வாரங்களில் பண்ட் எப்போது வேண்டுமானாலும் டெல்லி பயிற்சி மையத்திற்கு திரும்பலாம் என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் கூறி இருக்கிறது.
ரஞ்சி போட்டியில் முதல் சுற்று போட்டி வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் சுற்று போட்டிகள் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கும் வரும் நவம்பர் 14ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் பண்ட் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது.