மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த அதிரடி நட்சத்திர வீரர் என்று அனைவராலும் பெயர் வாங்கப்பெற்றவர் ரிஷப் பண்ட். இளம் கிரிக்கெட் வீரர்கள் எப்போதுமே ஒரு நாள், டி20 யில் தான் சூப்பராக விளையாடுவார்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்படும்.
ஆனால் இந்த விமர்சனத்தை உடைத்து எறிந்தவர் தான் ரிஷப் பண்ட். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 போட்டிகளில் விளையாடி 5 சதம்,11 அரை சதம் என 2271 ரன்கள் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் யாருமே பல ஆண்டுகளாக வெற்றி பெறாத மைதானத்தில் ஆஸ்திரேலியாவை ரிஷப் பண்ட்,தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் வீழ்த்தினார்.

இப்படி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்திற்கு சென்ற ரிஷப் பண்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார். பிழைத்தது புது உயிர் என்பது போல் இருந்தது. இந்த விபத்து குறித்தும் அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் ரிஷப் பன்ட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் என்னுடைய கால்களில் உள்ள நரம்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் என் காலை எடுத்து விட்டு செயற்கை கால்களை பொறுத்திருப்பார்கள். இதை மருத்துவர்கள் என்னிடம் சொன்ன போது அப்போதுதான் முதல் முறையாக நான் பயந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடைபெறவில்லை. நான் எஸ்யூவி வகையான பெரிய காரை எடுத்துச் சென்றேன். ஆனால் விபத்திற்கு பிறகு அது நசுங்கி சிறிய காராக மாறிவிட்டது.
விபத்திலிருந்து என்னை அங்கிருந்தவர்கள் மீட்டபோது என்னுடைய முட்டி நேராக இல்லை. திரும்பி இருந்தது. அங்கு இருந்தவர்களிடம் இதை சரி செய்யுமாறு நான் கூறினேன். என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக அப்படி ஒரு சம்பவத்தை நான் உணர்ந்தேன். எனக்கு காயம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.