லக்னோ : ஐபில் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது பஞ்சாப் அணி தம்மை வாங்கி விடுமோ என்ற பயத்தில் இருந்ததாக ரிஷப் பண்ட் கலாய்த்து இருப்பது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி டெல்லி அணி மற்றும் பஞ்சாப் அணி புதிய கேப்டன்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இருந்தனர்.
அப்போது பஞ்சாப் அணியிடம் தான் அதிக அளவு கைவசம் பணம் இருந்ததும் இதனால் மெகா ஏலத்தின்போது ரிஷப் பண்டை பஞ்சாப் அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கியது.இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள லக்னோ அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள பண்ட், ஏலத்திற்கு முன்பு எனக்கு ஒரே ஒரு டென்ஷன் தான் இருந்தது.

அதற்குக் காரணம் பஞ்சாப் அணிதான். ஏனென்றால் அவர்களிடம் அதிக அளவு பணம் இருந்தது. இதனால் நான் பயந்தேன்.ஆனால் நல்வாய்ப்பாக பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கி விட்டார்கள். இதன் மூலம் நான் லக்னோ அணிக்கு செல்ல முடியும் என்பதை உணர்ந்தேன். ஆனால் ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நாம் எதையுமே கணிக்க முடியாது.
எனவே நான் மெகா ஏலத்தை அமைதியாக உட்கார்ந்து பார்த்து கடவுளை பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் என்று ரிஷப் பண்ட் கிண்டல் அடித்திருக்கிறார்.மேலும் பேசிய பண்ட், ஒரு கேப்டனாக தோனி மற்றும் ரோகித் சர்மாவிடமிருந்து நிறைய விஷயங்களை தான் கற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா, நாங்கள் வைத்திருக்கும் பணத்தை கொண்டு ரிஷப் பண்டை எப்படி வாங்கலாம் என்பதை தான் நாங்கள் ஏலத்திற்கு முன்பு யோசித்துக் கொண்டிருந்தோம்.பண்ட்டை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதுதான் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. பண்ட்டை ஏன் வாங்கினீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள்.
இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் விலை உயர்ந்த வீரர் என்ற பெயரை மட்டும் இல்லாமல் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற பெயரையும் அவர் பெறுவார் என்று சஞ்சிவ் கோயங்கா கூறியுள்ளார். ரிஷப் பண்ட் பிறந்ததில் இருந்து ஒரு தலைவருக்கான தகுதிகள் உடைய கிரிக்கெட் வீரராக இருக்கிறார் என்று சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.