மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே, இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் மோசமான காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த டெஸ்டில் இனி விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து வீரர் லியாம் டாசன் கூறியுள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிஷப் பண்ட் 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயன்றார். ஆனால் பந்து எதிர்பாராதவிதமாக பேட்டின் உள்விளிம்பில் பட்டு, அவருடைய வலது காலில் பலமாகத் தாக்கியது. அடிபட்டவுடனே வலியால் துடித்த பண்ட், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அவருடைய காலில் பயங்கரமான வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவரால் நிற்கக் கூட முடியவில்லை. எல்பிடபிள்யூ அப்பீலில் இருந்து தப்பித்தாலும், அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து முதலுதவி அளித்தார். ஆனாலும், வலி குறையாததால், கோல்ஃப் வண்டி மூலம் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், ஸ்கேன் எடுப்பதற்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்திய கேப்டன் சுப்மன் கில்லும் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன், "ரிஷப் பண்ட் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அந்தக் காயம் பார்க்கவே மோசமாக இருந்தது. அவர் இந்திய அணியின் மிக முக்கிய வீரர். இந்தக் காயத்திற்குப் பிறகு, அவர் இந்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறினார்.
காயம் அடையும்போது ரிஷப் பண்ட் 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். சாய் சுதர்சனுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தார். அவர் களத்தில் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு பின்னடைவுதான்.
இந்த சம்பவம் நடந்தபோது மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன், "ரிஷப் பண்ட் கடுமையான வலியால் துடித்தார். அவர் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வராவிட்டால், அது அணிக்கு இழப்புதான். இருந்தாலும், களத்தில் இருக்கும் மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி, அந்த இழப்பை ஈடுகட்ட முயற்சிப்போம்" என்று தெரிவித்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
ரிஷப் பண்ட்டிற்கு இந்தத் தொடரில் காயம் ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முந்தைய லார்ட்ஸ் டெஸ்டில் விக்கெட் கீப்பிங் செய்தபோது, அவருடைய விரலில் காயம் ஏற்பட்டது. இப்போது காலில் அடிபட்டுள்ளது. இதனால், இந்த டெஸ்டில் மாற்று விக்கெட் கீப்பரான துருவ் ஜுரல், விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.