
ரிஷப் பண்ட் உடல்நிலை
ரிஷப் பண்ட்-க்கு கால்களில் தசைநார்கள் கிழிந்துள்ளதால் அதற்கான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுவிட்டன. இன்னும் 6 வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சையும் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால் அவரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என ரசிகர்கள் கவலையில் இருந்த சூழலில் நேற்று முதல்முறையாக அவரே ட்வீட் போட்டார்.

பண்ட்-ன் ட்வீட்
அதில், தன்னை காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி கூறியுள்ளார். அதாவது " எனக்காக ஆதரவுக்கொடுத்த அனைவருக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு நன்றிக்கூற இயலவில்லை. ஆனால் என்னைக் காப்பாற்றிய ராஜத் குமார் மற்றும் நிஷு குமார் என்ற இரு ஹீரோக்களுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். என்னை காப்பாற்றியதோடு, மருத்துவமனைக்கு சென்றுவிட்டேனா எனவும் தேடி வந்து பார்த்து சென்றனர். அவர்களுக்கு மனதார நன்றி கூறிக்கொள்கிறேன் என பண்ட் கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி
முன்னதாக தனது உடல்நிலை குறித்தும் பண்ட் ட்வீட் செய்திருந்தார். அதில், எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் பணிவான நன்றியை கூறிக்கொள்கிறேன். எனது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். குணமடைந்து வெற்றி பாதையில் வருவதற்கான பயணம் தொடங்கிவிட்டது. அந்த பயணத்தில் வரவிருக்கும் சவால்களுக்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு முழு உதவுகளையும் செய்துக்கொடுத்த பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.

எப்போது குணமாவார்?
அறுவை சிகிச்சை முடிந்தாலும், ரிஷப் பண்ட் குணமடைந்து மீண்டும் பழைய உடற்தகுதியை பெறுவதற்கு இன்னும் 10 மாதங்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் 2023ம் ஆண்டு ஐபிஎல், ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என முக்கிய தொடர்களில் அவரை காண முடியாது எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











