லக்னோ: 2025 ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்ட்டை நோக்கி அவர் ஆக்ரோஷமாகப் பேசியதும், பண்ட் முன் கை விரல்களை காட்டி கடுமையாக விமர்சிக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவானது.
இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பண்ட்டை தனது அணியின் கேப்டனாகவும் நியமித்தார். ஆனால், இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் பண்ட் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பல சொதப்பல்களைச் செய்தார்.

மேலும், கேப்டனாகவும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுத் தந்திருக்கிறார். நேற்று லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். லக்னோ அணியின் பேட்டிங்கின்போது ரிஷப் பண்ட் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.2 ஓவர்களில் அந்த இலக்கை எளிதாக எட்டியது. எந்த இடத்திலும் பஞ்சாப் அணி சிரமத்தை எதிர்கொள்ளவில்லை. அதிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்களைச் சேர்த்து மிரட்டி இருந்தார்.
இந்தப் போட்டி முடிந்தவுடன் மைதானத்திற்கு வந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேராக ஸ்ரேயாஸ் ஐயரைக் கட்டி அணைத்துப் பேசிக்கொண்டிருந்தார். மேலும், ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சனம் செய்து பேசும் காட்சிகளும் வெளியானது.
அதை வைத்து ரசிகர்கள் பல்வேறு ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க நினைத்ததாகவும், ஆனால் அவரது விலை அதிகமாக இருப்பதாக நினைத்து பின்னர் அவரை விட்டுவிட்டதாகவும் கூறி வருகின்றனர். அதனால், அடுத்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தனது அணிக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
மறுபுறம், ரிஷப் பண்ட்டுடன் சஞ்சீவ் கோயங்கா ஆக்ரோஷமாகப் பேசினார். முதல் போட்டியிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்ட்டிடம் கடுமையாக நடந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தச் செயல்கள் ஐபிஎல் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.