லக்னோ: கடந்த 2025 மெகா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட், அந்த சீசனில் 269 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இந்நிலையில், இந்த 2026 சீசனில் தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங்கிடம் அவர் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.
ரிஷப் பண்ட் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், லக்னோ அணி நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கியுள்ளார். அவர் பேசுகையில், "ரிஷப் பண்ட் தற்போது யுவராஜ் சிங்கிடம் பயிற்சி பெற்று வருகிறார். அந்தப் பயிற்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நம்புகிறேன். ஆனால், லக்னோ அணி அவரது முழு திறமையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், அவரைத் தொடக்க வீரராகவோ அல்லது 3 ஆவது இடத்திலோ களமிறக்க வேண்டும். அதற்கு கீழ் வரிசையில் அவர் பேட்டிங் செய்யக் கூடாது" என்று அஸ்வின் தெரிவித்தார்.

கடந்த 2025 ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ஆர்சிபி அணிக்கு எதிராகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய பண்ட், ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் குவித்து மிரட்டினார். இதைக் சுட்டிக்காட்டிய அஸ்வின், "பவர்பிளேயில் களமிறங்குவதே அவருக்குச் சிறந்த வாய்ப்பாகும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகப் பவுண்டரிகள் அடிக்க அவர் மிகவும் சிரமப்படுகிறார். எனவே தொடக்க வீரராகக் களமிறங்கினால் அவருக்குப் பிரச்சனைகள் குறைவாக இருக்கும். அவர் ஓப்பனிங் செய்தால் இந்த ஆண்டு லக்னோ அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக அவரே இருப்பார்" என்று கூறினார்.

ஆனால், அஸ்வினின் இந்த யோசனையைச் செயல்படுத்துவதில் லக்னோ அணிக்குப் பெரிய சிக்கல் உள்ளது. மிட்செல் மார்ஷ் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அந்த அணியின் மிகச் சிறந்த தொடக்க ஜோடியாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பண்ட்டை தொடக்க வீரராகக் களமிறக்க மார்க்ரமை கீழ் வரிசைக்கு மாற்றினால், அது அணியின் பேட்டிங் சமநிலையைக் கடுமையாகப் பாதிக்கும்.

எனினும், அணியின் கேப்டன் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்புவது அணிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும் என்பதால், லக்னோ அணி நிர்வாகம் தனது பேட்டிங் வரிசையில் என்ன மாற்றங்களைச் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.