கொரோனா
பயிற்சி ஆட்டங்களுக்காக இந்திய வீரர்கள் தயாராகி வரும் நிலையில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடனடியாக தனியார் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு எப்போது கொரோனா உறுதியானது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
எப்படி பரவியது
டெஸ்ட் சாம்பியன்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 23-ந்தேதி முடிவடைந்தது. இதற்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சுமார் 40 நாட்கள் இடைவெளி உள்ளது. எனவே இந்திய விரர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் ஜாலியாக இங்கிலாந்தில் வலம்வந்தனர். அந்தவகையில் ரிஷப் பண்ட் யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தை நேரில் பார்க்க சென்றிருந்தார். அப்போது, ரசிகர் ஒருவருடன் முகக்கவசம் அணியாத நிலையில் ரிஷப் பண்ட் இருக்கும் படம் வெளியாகி வைரலானது. அங்கிருந்து தான் அவருக்கு கொரோனா பரவியிருக்கும் என தெரிகிறது.
10 நாட்கள் கெடு
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது துர்ஹாம் நகரத்தில் இணைந்து வருகின்றனர். அங்கு வரும் ஜூலை 20ம் தேதி முதல் கவுண்டி அணிகளுடன் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. இதில் ரிஷப் பண்ட் கலந்துக்கொள்ளப்போவதில்லை. அவர் அடுத்த 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளார். அதன் பிறகு எடுக்கப்படும் 2 கட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வரவேண்டும். 10 நாட்களுக்கு பிறகும் கூட பாசிடிவ் என வந்தால் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகிறது.
Recommended Video
இந்திய அணிக்கு பின்னடைவு
இந்தியாவின் டெஸ்ட் அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் தூணாக உள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஏமாற்றம் அளிக்கும் போதெல்லாம் பண்ட் காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.