அகமதாபாத்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லிடம் பேச முற்பட்டபோது, சுப்மன் கில் அவரை தவிர்த்து விட்டு சென்றார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், போட்டி முடிந்தவுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர்களுடன் கை குலுக்கி கொண்டு சென்றார்.

அப்போது ரிஷப் பண்ட் சுப்மன் கில் அருகே வந்து ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், சுப்மன் கில் பண்ட்டுக்கு சம்பிரதாயமாக கை குலுக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ரிஷப் பண்ட் சொன்னதை அவர் காதில் வாங்கவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
அடுத்து ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற உள்ளனர். அதிலும், சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை சுப்மன் கில் கண்டுகொள்ளாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இத்தனைக்கும் இந்திய அணியில் ரிஷப் பண்ட், சுப்மன் கில்லை விட மூத்த வீரர் ஆவார். அவருக்குத்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவி அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சமீப காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் சராசரியாக இருக்கும் நிலையில், அவர் அந்த வாய்ப்பை இழந்து இருக்கிறார். சுப்மன் கில்லும் டெஸ்ட் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனினும், அவர் மீது பிசிசிஐ அதிகாரிகளுக்கு அதிக நம்பிக்கை இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட உள்ளது.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளைத் தவிர மற்ற கிரிக்கெட் வடிவங்களிலிருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில், இந்திய அணியின் வருங்கால நட்சத்திரங்களாகப் பார்க்கப்படும் இரண்டு வீரர்கள் இவ்வாறு நடந்து கொண்டது கவலையை அதிகரித்து உள்ளது.
நாளை சனிக்கிழமை (மே 24, 2025) அன்று இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அந்த சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.