பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியின் 2வது இன்னிங்ஸ் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டு நெடுஞ்சாலை கார் விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், சுமார் 18 மாதங்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அதில் இந்திய அணியின் எதிர்பார்ப்பை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்தார்.

இருந்தாலும் ரிஷப் பண்ட்-டம் இருந்து எதிர்பார்த்த அளவிற்கான பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் சொதப்பிய ரிஷப் பண்ட், டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் சொதப்பினார். இந்த நிலையில் இந்திய அணிக்கான ஹோம் சீசன் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக, இந்திய அணியின் அனைத்து வீரர்களையும் துலீப் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்களை தவிர அனைவரும் துலீப் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தியா பி அணியில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்தியா ஏ - இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், எந்த பவுலராக இருந்தாலும் பவுண்டரியை விளாசி கொண்டே இருந்தார். அதேபோல் குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 20வது அரைசதம் இதுவாகும்.
சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 47 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் ரிஷப் பண்ட் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடக்கும் 5 டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தால் தான் ரிஷப் பண்ட்-டால் மீண்டும் உச்சக்கட்ட ஃபார்மை மீட்டெடுக்க முடியும்.
ஏனென்றால் கடந்த முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற முக்கிய காரணமாக ரிஷப் பண்ட் அமைந்தார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் மட்டுமே இருப்பதால், அவருடன் ரிஷப் பண்ட் இணையும் போது இந்திய அணியின் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.