லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தன்னை அந்த அணியிலிருந்து நீக்க உள்ளதாகப் பதிவு வெளியிட்ட ஒருவரை கடுமையாக கண்டித்திருக்கிறார். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அவர் அதிரடி பேட்ஸ்மேனாக செயல்படுவதுடன், அந்த அணியின் கேப்டனாகவும் இருப்பார் என்ற நம்பிக்கையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை இத்தனை பெரிய தொகை கொடுத்து வாங்கி இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பெரிய ஏமாற்றம் அளித்தார். தான் விளையாடிய முதல் 12 போட்டிகளில் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதுவும் 135 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து, அதிரடியாக ஆடாமலும், ரன்னும் குவிக்காமலும் ஏமாற்றம் அளித்திருந்தார். மேலும், அந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து இருந்தது.

இதை அடுத்து, ரிஷப் பண்ட் மீது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஏமாற்றத்தில் இருப்பதாகப் பல்வேறு தகவல்களும் வெளியானது. கடைசியாக அந்த அணியின் போட்டியில் ரிஷப் பண்ட் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்தபோது, அவர் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து ஏமாற்றத்துடன் உள்ளே சென்றார்.
இதை அடுத்து, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் லக்னோ அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதை முன்வைத்து சமூக வலைதளத்தில் ஒருவர், அடுத்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்டை வெளியேற்றும் எனவும், பண்ட்டுக்கு 27 கோடி ரூபாய் கொடுப்பது அதிகம் என லக்னோ அணி நிர்வாகம் கருதுவதாகவும் தகவல் வெளியிட்டு இருந்தார்.
அதை சுட்டிக்காட்டி இருக்கும் ரிஷப் பண்ட், "பொய்யான செய்திகளை வெளியிடுவதன் மூலம் அதிக பார்வைகளை பெற முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அனைத்தையும் வைத்து பொய்யான செய்திகளை உருவாக்காதீர்கள். சற்று சிந்தித்து உண்மையான செய்திகளை வெளியிடுங்கள்."
"உங்கள் பொய்யான செய்திகளை ஒரு உள்நோக்கத்துடன் வெளியிடாதீர்கள். பொறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் சமூக வலைதளங்களில் நடந்து கொள்ளுங்கள்" என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தன்னை நீக்கப்போவதில்லை என்பதை ரிஷப் பண்ட் சூசகமாக கூறியிருக்கிறாரா என்ற கோணத்திலும் இதை ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.