மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் காலில் காயம் அடைந்த இந்திய அணியின் ரிஷப் பண்ட்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே அவர் பேட்டிங் மட்டும் ஆடுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது. ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி வந்தார்.

கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், பந்தை மிஸ் செய்தார். இதனால் அந்த பந்து நேராக ரிஷப் பண்ட் காலில் அடித்தது. அப்போதே ரிஷப் பண்ட் பிசியோவை அழைத்து காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் காட்டினார். இதன்பின் ரிஷப் பண்ட் ஷூவை கழற்றி பிசியோ பார்த்த போது, ரத்தம் வழியத் தொடங்கியது தெரிந்தது. '
அதேபோல் சுண்டு விரல் அருகில் நல்ல வீக்கம் இருந்ததால், ரிஷப் பண்ட் நிற்க கூட முடியாமல் தவித்தார். பின்னர் சிறிய ரக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷப் பண்ட்க்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த முடிவுகளின்படி, ரிஷப் பண்ட் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் 6 வாரங்கள் ரிஷப் பண்ட் கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே ரிஷப் பண்ட் பெயின் கில்லர் எடுத்துக் கொண்டு பேட்டிங் ஆடுவதற்கு மீண்டும் வாய்ப்பு உள்ளதா என்பதை பிசிசிஐ மருத்துவக் குழு ஆராய்ந்து வருகிறது.
ஏனென்றால் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 10 பேட்ஸ்மேன்களோடு விளையாட வேண்டிய சூழல் உருவாகும். கன்கஷன் விதிமுறையின் படி ரிஷப் பண்ட்க்கு மாற்று வீரரைக் களமிறக்குவது தொடர்பாக நடுவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இதனால் இந்திய அணிக்கு புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அபாரமான ஃபார்மில் இருந்து வருகிறார். இங்கிலாந்து அணி வீரர்கள் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்து அச்சத்தில் இருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் காயத்தால் விலக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.