மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனது வாட்ஸ் அப் செயலியை நீக்கிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக அவருடைய பயிற்சியாளர் சோஹூம் தேசாய் தெரிவித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து வந்த ரிஷப் பண்ட், கடந்த 2022 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அதன் பிறகு ஒன்றரை ஆண்டு கழித்து மீண்டும் கிரிக்கெட் பக்கம் திரும்பிய ரிஷப் பண்ட் தற்போது தான் தன்னுடைய பழைய ஆட்டத்தை மீட்டு எடுத்து வருகிறார். இந்த சூழலில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய தொடரில் 5 டெஸ்டில் மொத்தமாகவே 255 ரன்கள் தான் அடித்திருந்தார்.

இதில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பண்ட், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதன் பிறகு தன்னை மாற்றிக்கொள்ள தீவிர முயற்சியை பண்ட் எடுத்ததாகவும் அவருடைய பயிற்சியாளர் தேசாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் பெஞ்சில் தான் அமர்ந்திருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் தோல்வி அடைந்ததும், அவருடைய மனதை பாதித்தது. இந்த சூழலில் சில பழக்கங்களை மாற்றினால் தான் மீண்டும் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
இதன் காரணமாக பண்ட், தனது மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவதை முதலில் நிறுத்தினார். வாட்ஸ் அப்பில் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு அவருடைய கவனத்தை சிதைப்பதால் முதலில் வாட்ஸ் அப்பை அவர் மொபைல் போனிலிருந்து நீக்கி விட்டார்.
அதன்பின் தொடர்ந்து பயிற்சியில் அவர் அதிகம் ஈடுபட்டார். ஒவ்வொரு நாளும் என்னை ஜிம்முக்கு அழைத்து சென்று அவருக்கு பயிற்சி வழங்க என்னை வற்புறுத்துவார். மேலும் தனது மொபைல் போனை பண்ட் எப்போதுமே சுவிட்ச் ஆப் செய்து விடுவார். இதனால் பண்ட்டை தொடர்பு கொள்ளவே முடியாத நிலை இருந்தது.
தனக்கு யாரிடமாவது பேச வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே அவர் மொபைல் போனை எடுத்து பேசுவார் என்று பயிற்சியாளர் தேசாய் கூறியிருந்தார். பண்டின் இந்த மாற்றம் அவருக்கு தற்போது முன்னேற்றத்தை தந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சதம் அடித்த பண்ட் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.