மும்பை: அஜித் அகர்கர் தலைமையிலான இந்தியத் தேர்வுக் குழு, சமீபகாலமாகத் தொடர்ந்து அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. டி20 உலகக்கோப்பை அணியிலிருந்து சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மற்றொரு சர்ச்சை வெடிக்கத் தயாராகிவிட்டது.
வருகிற ஜனவரி 11-ம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன ஆனால், இந்த முடிவு நியாயமானதா? ரிஷப் பண்ட் என்ன தவறு செய்தார்? என்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.
இஷான் கிஷன் தற்போது அசுர ஃபார்மில் இருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு, சையத் முஷ்டாக் அலி கோப்பையை (SMAT) வென்று கொடுத்தார். அந்தத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் இவரே. சமீபத்தில் விஜய் ஹசாரே தொடரில் வெறும் 33 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார்.
இதன் காரணமாகவே 2026 டி20 உலகக்கோப்பையிலும் இஷான் கிஷனுக்கு இடம் கிடைத்துள்ளது. இவரது இந்த ஆட்டத்தைப் பார்க்கும்போது இந்திய ஒருநாள் அணியிலும் இவருக்கு இடம் கொடுப்பது சரிதானே என்று தோன்றலாம். ஆனால், அதற்காக ரிஷப் பண்ட்டை வெளியேற்றுவது சரியா?

ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு மோசமாக விளையாடினாரா என்றால், இல்லை என்பதே பதில். சொல்லப்போனால், அவருக்கு விளையாடவே வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். கடந்த 3 ஆண்டுகளில் ரிஷப் பண்ட் விளையாடியது வெறும் ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டி மட்டும்தான்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து ஒருநாள் தொடர், சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் (கே.எல். ராகுல் கேப்டன்சி) என அனைத்துத் தொடர்களிலும் அணியில் இருந்தும், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்டார்.
தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், சமீபத்திய லிஸ்ட்-ஏ போட்டியில் 70 ரன்கள் குவித்துத் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். வாய்ப்பே கொடுக்காமல் ஒருவரை எப்படி அணியிலிருந்து நீக்க முடியும்? என்பதுதான் ரிஷப் பண்ட் ஆதரவாளர்களின் வாதம்.
ரிஷப் பண்ட்: ரன்கள் - 572, சராசரி - 40.85, சதம் - 1, அரைசதம் - 4
இஷான் கிஷன்: ரன்கள் - 607, சராசரி - 43.35, சதம் - 2, அரைசதம் - 1
மேலே உள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், பண்ட் மற்றும் கிஷன் இருவருமே கிட்டத்தட்ட ஒரே அளவிலான சராசரியைக் கொண்டுள்ளனர். ஆனால் பண்ட்டின் இந்த 15 இன்னிங்ஸ்கள் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளில் அவர் சேர்த்த ரன்களாக உள்ளது.
இஷான் கிஷனுக்குத் திறமை இருக்கிறது, வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால், அதற்காக ரிஷப் பண்ட்டை பலிகடா ஆக்குவது சரியான முடிவாக இருக்காது. சுப்மன் கில்லை உலகக்கோப்பைக்கு முன்பு கழட்டிவிட்டது போல, இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரான ரிஷப் பண்ட்டை காரணமின்றி நீக்குவது அணி நிர்வாகத்திற்குத் தேவையற்ற தலைவலியை உருவாக்கும்.
சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), விராட் கோலி, ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட்/இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா.