பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த இரண்டு முறை பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் தான் அபாரமாக விளையாடி அசத்தினார். ரிஷப் பண்டின் அபார ஆட்டம் பலமுறை இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய மண்ணில் காப்பாற்றியது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதே போல் ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரிஷப் பண்ட், தொடர்ந்து தடுமாறி வருகிறார். கார் விபத்தில் சிக்கிய பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடுகிறார் என்றாலும் பண்ட் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருப்பதால் இந்த தொடரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பண்ட்க்கு திட்டம் தீட்டி இருப்பதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தார். பண்டின் ரன்களை கட்டுப்படுத்த ஸ்பெஷல் திட்டம் போடப்பட்டிருப்பதாகவும் அதை நாங்கள் சரியாக செய்வோம் என்றும் கம்மின்ஸ் கூறினார்.
தற்போது அது உண்மையாக இருக்கிறது. இந்த தொடருக்கு முன்பு வரை கம்மின்ஸ், ரிஷப் பண்ட்க்கு 11 இன்னிங்ஸ்களில் 141 பந்துகளை வீசி இருக்கிறார். இதில் ரிஷப் பண்ட் 91 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த 11 இன்னிங்ஸில் ஒரு முறை கூட பாட் கம்மின்ஸ் பண்டிடம் ஆட்டம் இழந்ததில்லை.
ஆனால் தற்போது புதிய திட்டம் தீட்டியிருப்பதன் மூலம் இந்த தொடரின் ஐந்து இன்னிங்சில் கம்மின்ஸ் 41 பந்துகளை வீசி இருக்கிறார்.
இதில் பண்ட், 22 ரன்கள் அடித்து மூன்று முறை கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்திருக்கிறார். இதனால் கம்மின்ஸ் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதேபோன்று ஒரு திட்டத்தை இந்திய வீரர்களும் செய்யாமல் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுப்பதாகவும் குறிப்பாக டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த இந்திய அணி எந்த திட்டத்தையும் தீட்டவில்லை என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முதல் டெஸ்டில் 37 மற்றும் 1 ரன்கள் எடுத்த பண்ட், இரண்டாவது டெஸ்டில் 21 மற்றும் 28 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். 3வது டெஸ்டில் 9 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் அவுட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.