
சுவாரஸ்யம்
முதன் முறையாக நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜெயித்துவிட்டால், உலக டெஸ்ட் சாம்பியன் இந்தியா தான். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு உள்ளது. உலகத் தரம் வாய்ந்த இரு அணிகள், அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில் என்றால்.. பரபரப்புக்கும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சம் இருக்குமா என்ன?

மெகா அணி
இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. இன்று தான் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 3 விக்கெட் கீப்பர்களுடன் பயணிக்கிறது இந்திய அணி.

ரிஷப் பண்ட்
ஆனால், இதில் பிரைமரி விக்கெட் கீப்பராக இருக்கப் போவது ரிஷப் பண்ட் என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த டிசம்பர் - ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 2 - 1 என்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட். இந்திய அணியில் 6வது வீரராக களமிறங்கி சிக்ஸர், பவுண்டரி என சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளுகிறார். அப்போது எந்த பவுலராலும் இவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அஞ்சும் எதிரணிகள்
தனது ஆக்ரோஷமான அதே ஃபார்மை, அதன் பிறகு இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், பண்ட் அப்படியே வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் களமிறங்கும் வரை எதிரணி கையில் இருக்கும் மேட்சுகள், அவர் களமிறங்கிய பின் மெல்ல மெல்ல கையைவிட்டுச் சென்றுவிடுவதே, அவர் மீதான அச்சத்தின் காரணம். சும்மா ரெண்டு சிக்ஸு அடிப்பாரு.. போயிடுவாரு என்றில்லாமல், ஓவருக்கு ஓவர் சிக்ஸர், பவுண்டரி என்று பறக்கவிட்டு, ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

எக்ஸ் ஃபேக்டர்
இதனால், நியூசிலாந்து அணியும் சரி... இங்கிலாந்து அணியும் சரி, மற்ற வீரர்களை காட்டிலும் ஆறாவது வீரராக களமிறங்கும் ரிஷப் பண்ட் மீதே அதிகம் குறி வைக்கின்றன. அவரை விரைவில் அவுட் செய்யாவிடில், அதிலிருந்து மீள்வது கஷ்டம் என்பதை கடந்த ஆறேழு மாதங்களில் அவரது பேட்டிங் பார்த்து ஒவ்வொரு அணியும் உஷாராகிவிட்டன. ஸோ, நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் சரி.. இங்கிலாந்து தொடரிலும் சரி.. எதிரணி பவுலர்கள் மெயின் டார்கெட் ரிஷப் பண்ட் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications