டெல்லி: 2026 புத்தாண்டை கிரிக்கெட் பிரபலங்கள் எல்லாம் பார்ட்டி, கொண்டாட்டம் என ஜாலியாக இருக்கும் வேளையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராமில் போட்ட ஒரு 'ஸ்டோரி', கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஜனவரி 11-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பண்ட் போட்டுள்ள இந்த பதிவு, அவருக்கு அணியில் இடம் இல்லை என்பதை சூசகமாக உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

புத்தாண்டை வரவேற்கும் அதே வேளையில், "2025-ல் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்" என்ற தலைப்பில் சில தத்துவார்த்தமான வரிகளைப் பகிர்ந்துள்ளார் பண்ட். "நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்", "நம் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்", "மற்றவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்", "விடைகளைத் தேடி அவசரப்படாமல் நிதானிக்க வேண்டும்" என்றெல்லாம் அவர் பதிவிட்டுள்ளார்.
இதை படிக்கும்போது, ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தையும், அதை பக்குவமாக ஏற்றுக்கொள்வதையும் அவர் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
உண்மையைச் சொல்ல வேண்டுமெльнай, ரிஷப் பண்ட்டின் சமீபத்திய ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே ட்ராபியில் (VHT 2025-26) அவர் சோபிக்கத் தவறிவிட்டார். 5 போட்டிகளில் விளையாடி வெறும் 121 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம், அவருக்கு போட்டியாக இருக்கும் மற்ற விக்கெட் கீப்பர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்.
துருவ் ஜூரல் வெறும் 3 போட்டிகளில் 307 ரன்களைக் குவித்துள்ளார். இஷான் கிஷன் விளையாடிய ஒரே போட்டியில் 125 ரன்கள் விளாசித் தள்ளியுள்ளார். இப்படி ஜூனியர் வீரர்கள் அதிரடி காட்டும்போது, ஃபார்மில் இல்லாத பண்ட்டை தேர்வாளர்கள் எப்படித் தேர்வு செய்வார்கள்?
ஏற்கனவே கே.எல். ராகுல் தான் ஒருநாள் அணியின் முதல் விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக யாரை எடுப்பது என்ற போட்டியில், இஷான் கிஷன் தற்போது முன்னணியில் உள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரிலேயே ரிஷப் பண்ட் பெஞ்சில் தான் உட்கார வைக்கப்பட்டார்.
தற்போது டி20 அணியில் இருக்கும் இஷான் கிஷன் போட்டி பயிற்சி தேவை என்ற வகையில் உள்ளே வரவுள்ளதால், ரிஷப் பண்ட் கழட்டிவிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் ஒருவேளை உடற்தகுதி பெறவில்லை என்றால் தேவ்தத் படிக்கல் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளே வருவார்களே தவிர, பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான்.
ரிஷப் பண்ட் ஒரு தனித்துவமான மேட்ச் வின்னர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து பிசிசிஐ காய்களை நகர்த்தி வருகிறது. நிலையான ஆட்டம் இல்லாதது தான் பண்ட்டுக்கு எமனாக மாறியுள்ளது. மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி, ரன்களைக் குவித்துத் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியின் கதவு மீண்டும் திறக்கும்.