லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறார். இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் அளித்த வீரர் என்றால் அது ரிஷப் பண்ட் தான். அவரது பேட்டிங் மோசமாக இருக்கும் நிலையில், அவரது பிரச்சினையை ஐந்து நிமிடத்தில் சரி செய்து விடலாம் என யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைக்கும் வகையில் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 இன்னிங்ஸ்களில் 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 12.27 என்பதாகவும், ஸ்ட்ரைக் ரேட் வெறும் 100 என்பதாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஏன் இப்படி மோசமாக விளையாடுகிறார்? என முன்னாள் வீரர்கள் பலரும் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி உரிமையாளர் மற்றும் அணி நிர்வாகம் அவருக்கு கேப்டனாக அதிக அழுத்தத்தை அளிப்பதால் தான் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
ஆனால், யுவராஜ் சிங்கின் தந்தையும் பயிற்சியாளருமான யோக்ராஜ் சிங், தான் ஐந்து நிமிடங்களில் ரிஷப் பண்டின் பிரச்சனையை சரி செய்து விடுவேன் என்று கூறி இருக்கிறார். ரிஷப் பண்ட் சரியாக விளையாடாததற்கான உண்மையான காரணத்தையும் அவர் விவரித்து இருக்கிறார்.
"ரிஷப் பண்டின் பிரச்சனையை நான் ஐந்து நிமிடங்களில் சரி செய்து விடுவேன். அவரது தலை நிலையாக இருக்கவில்லை. இடது தோள் அதிகமாக விரிவடைகிறது. அவரது பிரச்சனையில் கவனம் செலுத்தி சரி செய்தால் அவர் விரைவில் தனது சிறந்த செயல்பாட்டுக்கு திரும்புவார்," என்று யோக்ராஜ் சிங் கூறியிருக்கிறார்.
யோக்ராஜ் சொன்ன பிரச்சனை உண்மைதானா என்பது குறித்து ரசிகர்கள் பலரும் ஆராயத் துவங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு முன் தனது பேட்டிங் பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும்.