மும்பை: கார் விபத்திலிருந்து மீண்டு வந்துள்ள ரிஷப் பண்ட்டிற்கு, சமீபத்தில் அவர் செய்யும் ஒரு செயல் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே எச்சரிக்கை விடுத்துள்ளார். களத்தில் அவர் செய்யும் இந்த செயல் தேவையற்றது என்றும், அது அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் அந்த மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரிஷப் பண்ட் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அவர் அசத்தினார். குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பிறகு, 'சம்ர்சால்ட்' அடித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.

முன்னதாக, 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கடைசி லீக் போட்டியின் முடிவிலும் அவர் சதம் அடித்து விட்டு இதேபோல 'சம்ர்சால்ட்' அடித்துக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதை ஐபிஎல் அணி உரிமையாளர் மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு வெளிப்படுத்தும் விதமாகவே அவர் இவ்வாறு செய்வதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டிற்கு சிகிச்சை அளித்த எலும்பு முறிவு சிறப்பு மருத்துவரான தின்ஷா படிவாலா இதுகுறித்து பேசியுள்ளார். 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் காரை ஓட்டிச் சென்றபோது, அது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. படுகாயங்களுடன் ரிஷப் பண்ட் உயிர் தப்பினார். சுமார் இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பினார்.
மருத்துவர் தின்ஷா பர்திவாலா கூறுகையில், "ரிஷப் பண்ட் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர். பார்ப்பதற்கு சற்று பருமனாகத் தெரிந்தாலும், அவரது உடல் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால்தான் அவரால் 'சம்ர்சால்ட்' அடிக்க முடிகிறது. அவர் அதற்கு நன்கு பயிற்சி பெற்று, அதை மிகவும் சரியாகவும் செய்கிறார். ஆனால், அதை இப்போது செய்வதற்கான அவசியம் இல்லை."
"ரிஷப் பண்ட் தான் உயிர் வாழ்வதே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்பதை உணர்ந்துள்ளார். இந்த விபத்திற்குப் பிறகும், முன்பை விட அதிக உத்வேகத்துடன் ஒரு கிரிக்கெட் வீரராகத் திகழ்கிறார். அவர் இப்போது வாழ்க்கையை தத்துவ ரீதியாக அணுகுகிறார். தன்னைச் சுற்றி நடப்பவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறார்."
"மரணத்தை நேருக்கு நேர் சந்தித்த அனைவருக்கும் இதுபோன்றுதான் நடக்கும்; அவர்கள் வாழ்க்கையை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பார்கள். ரிஷப் பண்ட் உயிருடன் திரும்பியது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். கார் தலைகீழாகக் கவிழ்ந்து வெடித்துச் சிதறியது, அப்படிப்பட்ட ஒரு விபத்தில், உயிரிழப்பதற்கான அபாயம் மிகவும் அதிகம் இருந்தது." என்று கூறினார் மருத்துவர் தின்ஷா.