மூன்றாவது டெஸ்ட்.. பும்ரா மீண்டும் வருகிறார்.. தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த்!
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் களமிறக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களிலும், இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களிலும் இங்கிலாந்து வென்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் தோல்வி குறித்து கேப்டன் கோஹ்லி மற்றும் கோச் ரவி சாஸ்திரியிடம் பிசிசிஐயும் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் வென்றால், தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விடும்.

இந்திய அணிக்கு வாய்ப்பு
டெஸ்ட் தொடரை இழப்பதை தடுக்கவும், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வரவும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தேறினார் பும்ரா
இந்த நிலையில், அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காயம் காரணமாக இரண்டு டெஸ்ட்களில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

வலுபெறும் பந்துவீச்சு
இரண்டாவது டெஸ்டிலேயே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா வரும் பட்டத்தில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு அடுத்த டெஸ்டில் வாய்ப்பு இருக்காது. பும்ராவின் வருகையில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வலுபெறும்.

பந்த்துக்கு வாய்ப்பு
இரண்டு டெஸ்ட்களில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications