தோஹா: 2025 ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை (Rising Star Asia Cup) அரை இறுதிப் போட்டியில் இந்தியா 'ஏ' அணியை வங்கதேச 'ஏ' அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில், சூப்பர் ஓவரில் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பேட்டிங் செய்ய விடாமல் ஓரங்கட்டி வெளியே அமர வைத்தது ஏன் என்ற சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா தான் மட்டும் புகழ் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பேட்டிங் செய்ய விடாமல் செய்தாரா என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்த மோசமான முடிவால் இந்தியா 'ஏ' அணி வங்கதேச 'ஏ' அணியிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்தப் போட்டியில் வங்கதேச 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது. அந்த ஓவரில் கடைசிப் பந்தில் நான்கு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதுவும் வங்கதேச வீரர் அக்பர் அலி செய்த தவறான த்ரோவால் இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் போட்டி சமநிலைக்குச் சென்றது. இந்திய அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி இருந்தனர். வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். அவர் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 253 ஆக இருந்தது.
பிரியன்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 191.3 ஆக இருந்தது. இந்த இரண்டு வீரர்களும் அதிரடி ஆட்டம் ஆடியிருந்ததால், அவர்கள்தான் சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்ய வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக கேப்டன் ஜிதேஷ் சர்மா மற்றும் ரமந்தீப் சிங் ஆகிய இருவரும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய களம் இறங்கினார்கள். அது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஜிதேஷ் சர்மா இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த போது 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு சிக்ஸர்கள் அடித்திருந்தார். ரமந்தீப் சிங் 11 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஏன் பேட்டிங் செய்ய வருகிறார்கள் என்று குழப்பம் நிலவியது. இதில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஜிதேஷ் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வைபவ் சூர்யவன்ஷி இறங்குவார் என எதிர்பார்த்தபோது, அப்போது அசுதோஷ் சர்மா பேட்டிங் செய்ய வந்தார்.
அவர் சூப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்களையும் இழந்ததுடன், இந்திய அணியின் சூப்பர் ஓவர் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
வங்கதேச அணி ஒரு ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், முதல் பந்தில் ஒரு விக்கெட்டை இழந்தது. இரண்டாவது பந்தில் சுயாஷ் சர்மா வீசிய 'வைடு' (Wide) மூலம் வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேச 'ஏ' அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா 'ஏ' அணி வெளியேறியது.
இந்த தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும், அவருக்கு சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பலரும் வைபவ் சூர்யவன்ஷி சூப்பர் ஓவரின்போது விரக்தியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கேப்டன் ஜிதேஷ் சர்மாவை விமர்சித்து வருகின்றனர். ஜிதேஷ் சர்மா தானே சூப்பர் ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வைபவ் சூர்யவன்ஷியை ஓரங்கட்டி விட்டார் என விமர்சித்து வருகின்றனர்.