புதுச்சேரி: தியோதர் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், 68 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வரும் ரியான் பராக், அசாம் மாநில கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறார். சிறு வயதிலேயே ராஜஸ்தான் அணியில் இடம்பிடித்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியவர். சிக்சர்கள் அடிப்பதில் வல்லவரான ரியான் பராக், ஃபீல்டிங்கில் கடினமான கேட்ச்களையும் அசால்ட்டாக பிடித்து அசத்துவார். இருப்பினும் தேவையில்லாத பேச்சுகள் மற்றும் ட்விட்டர் பதிவுகளால் ரசிகர்களிடம் அதிகமாக வாங்கிக் கட்டிக்கொள்வார்.

அதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில் ரியான் பராக் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 7 போட்டிகளில் விளையாடிய ரியான் பராக் வெறும் 78 ரன்களை மட்டுமே சேர்த்தார். இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்தே ரியான் பராக் ஓரம்கட்டப்பட்டார். இந்த நிலையில் இந்திய ஏ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், தியோதர் டிராபியிலும் அதிரடியான பேட்டிங் மூலம் அனைவரின் கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 38 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 50 ரன்களிலும், விராட் சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிசவ் தாஸ் 3 ரன்களிலும், கேப்டன் சவுரப் திவாரி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கிழக்கு மண்டல அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது களமிறங்கிய ரியான் பராக் அதிரடியாக பல சிக்சர்களை விளாசி தள்ளினார். தேவைக்கேற்ப பவுண்டரியும் சிக்சர்களும் பறக்க, கிழக்கு மண்டல அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. எதிர்முனையில் நின்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரியான் பராக் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அதில் 6 பவுண்டரியும், 5 சிக்சர்களும் அடங்கும்.
இவரின் அதிரடி ஆட்டத்தால் கிழக்கு மண்டல அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. 3 நாட்களுக்கு முன் வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடிய ரியான் பராக் சதம் விளாசி அசத்தியது குறிப்பிடத்தக்கது.