மும்பை: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ACC Emerging Players எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 8 ஆசிய அணிகள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்கிறார்கள். இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவரும் ரியான் பராக் இடம்பெற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரியான் பராக் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 78 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் ஐபிஎல் தொடரின் போது ரியான் பராக்கை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணியிலும் ரியான் பராக் இடம் கேள்விக்குறியாகியது.
அவரது இடத்தை எளிதாக துருவ் ஜுரெல் தனதாக்கி கொண்டார். இதனால் இந்திய ஏ அணியில் ரியான் பராக் இடம்பெற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ரியான் பராக் ஐபிஎல் தொடர் தவிர்த்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தலாக விளையாடி இருப்பதே அவரின் தேர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
முதல் தர போட்டிகளில் மட்டும் 44 இன்னிங்ஸ்களில் 1,420 ரன்களும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 36 இன்னிங்ஸ்களில் 1308 ரன்களும் குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களின் குறைபாடு அதிகரித்துள்ளது. டாப் மற்றும் மிடில் ஆர்டர்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட பந்துவீச்சு பக்கமே இல்லாததால், ரியான் பராக் போன்ற வீரர்களை தரம் உயர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதுவே ரியான் பராக்கின் தேர்வுக்கும் மறைமுக காரணமாக அமைந்துள்ளது.