மும்பை : 21 வயதிலே பல்வேறு எதிரிகளையும் விமர்சகர்களையும் சம்பாதித்து வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் தான் ரியான் பராக். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இவர், திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்டாலும் தன்னுடைய வாய்க்கொழுப்பால் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார்.
பொதுவாக சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் எல்லாம் தங்களை விமர்சனம் செய்பவர்களை தங்களுடைய பேட் மூலம் பதிலடி கொடுப்பார்கள். இந்த நிலையில் 21 வயது ஆன ரியான் பராக் தம்மை விமர்சனம் செய்பவர்களை கடுமையாக பேசி திட்டி தீர்த்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோ ஒன்றில், நாங்கள் விளையாடுவதை மட்டும் பார்ப்பதற்காக மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை கொடுக்கவில்லை. நாங்கள் மைதானத்தில் எப்படி செயல்படுகிறோம்? எப்படி நடந்து கொள்கிறோம் என்பதையும் பார்க்க தான் வருகிறார்கள்.
நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் எங்கள் மீது கோபப்படுவார்கள். அது எனக்கு பிரச்சனை இல்லை. சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் என பலரும் என்னை பற்றி விமர்சனம் செய்வதற்காக நேரம் எடுத்துக்கொண்டு ட்விட்டரில் பதிவிடுகிறார்கள். அவ்வளவு ஏன் நீங்கள் கஷ்டப்பட வேண்டும். எனக்கு ஒரு மெசேஜ் செய்யலாமே?
எனக்கு ஒரு போன் செய்து நீ இப்படி விளையாடினால் நிச்சயமாக உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மேம்படும் என்று எனக்கு அறிவுரை கூறலாமே. எப்போதுமே என் முகத்துக்கு நேராக பேசுபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அதை தான் எதிர்பார்க்கிறேன்.இந்த ஐபிஎல் தொடரில் நான் மும்பை மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட ஆசைப்பட்டேன்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு போட்டிகளுக்கு எதிராகவும் நான் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. ஆர் சி பி க்கு எதிராக நான் மனதளவில் தயாராக இருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விராட் கோலியை பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் களத்தில் பகிர்ந்து கொண்டு விளையாடுவதும் அந்த அணியை வீழ்த்துவதும் எனக்கு நிச்சயம் சந்தோஷத்தை கொடுத்திருக்கும்.
ஆனால் அன்றைய ஆட்டத்தில் நான் இடம் பெறாததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன்.இப்போது எனக்குள் இருக்கும் ஒரே குறிக்கோள் இந்திய ஏ அணிக்காக நான் விளையாட வேண்டும் என்று ரியான் பராக் கூறியுள்ளார்.