மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் மூன்று போட்டிகளுக்கு இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாக செயல்பட உள்ளார். இதை தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் வீரர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 23 வயதிலேயே ஐபிஎல் அணியின் கேப்டனாகும் வாய்ப்பை ரியான் பராக் பெற்று இருக்கிறார்.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஐபிஎல் தொடரில் மிக இளைய வயதில் கேப்டனான வீரர் என்ற சாதனையையும் ரியான் பராக் படைத்திருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் தனது முதல் மூன்று போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளின் போது ரியான் பராக் ராஜஸ்தான் கேப்டனாக செயல்படுவார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இருப்பினும், பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி அவர் இன்னும் சிறிது காலம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதாவது, அவர் பேட்டிங் செய்யலாம், ஆனால், விக்கெட் கீப்பிங் செய்வதை சில காலத்துக்கு தள்ளிப் போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
எனவே, சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக, வெறும் பேட்ஸ்மேனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடுவார் என அந்த அணி வட்டாரம் கூறுகிறது. எனினும், இது குறித்து இன்னும் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில்தான் ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்துவார் என சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார். இதன் மூலம், சஞ்சு சாம்சன் இம்பேக்ட் வீரராக, அதாவது வெறும் பேட்ஸ்மேனாக அணியில் பங்கேற்றாலும் அல்லது விளையாடாமல் போனாலும், ரியான் பராக் தான் முதல் மூன்று போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பல மூத்த வீரர்கள் இருந்தாலும், அந்த அணியில் ஐந்து ஆண்டுகளாக விளையாடி வரும் ரியான் பராக்குக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்து இருந்தார். 64 பந்துகளில் 144 ரன்கள் எடுத்திருந்தார். 16 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.
அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதையும் கருத்தில் கொண்டு அவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் உள்நாட்டுப் போட்டிகளில் அசாம் மாநில அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சஞ்சு சாம்சனுக்கு அடுத்து அவரே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஆவார் எனவும் பேச்சு கிளம்பி உள்ளது.
செய்தி சுருக்கம்: