சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021
சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு உலக தொடர் 2021 நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 6 நாடுகளை சேர்ந்த லெஜெண்ட்கள் பங்கேற்று ஆடினர். கடந்த சில தினங்களாக இந்தியா -இங்கிலாந்து தொடருக்கு இணையாக இந்த தொடரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சாலை பாதுகாப்பு உலக தொடர் இறுதிப்போட்டி
இந்நிலையில் இன்றைய தினம் இந்த தொடரின் இறுதிப்போட்டி ராயப்பூரின் ஷாகித் வீர் நாராயணன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன.
மீண்டும் மோதும் வீரர்கள்
முன்னதாக இந்த இரு அணிகளும் முறையே அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வெற்றி கொண்டு இந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. கடந்த 2011 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையில் பங்கேற்ற முக்கியமான வீரர்கள் இந்த போட்டியிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு அணிகள் தீவிரம்
இரு அணிகளிலும் சிறப்பான பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர், வீரேந்திரே சேவாக், ஜெயசூர்யா ஆகியோர் உள்ளனர். இதேபோல ஆல்-ரவுண்டர்களாக யூசுப் பதான், இர்பான் பதான், யுவராஜ் சிங், திலகரத்னே ஆகியோரும் பௌலர்களாக மன்பிரீத், நுவான் குலசேகரா, வினய் குமார் ஆகியோர் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கொள்ள இரு அணிகளும் தீவிரமாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.