ஹராரே: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத ஜிம்பாப்வே வீரர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்ப அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஜிம்பாப்வே, சர்வாதிகார அதிபர் ராபர்ட் முகாபே பதக்கம் வெல்லாத தனது நாட்டு வீரர்களை சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.
மொத்தம் 31 வீரர்களை ரியோ ஒலிம்பிக்கிற்கு ஜிம்பாப்வே அனுப்பி வைத்திருந்தது. ஆனால் யாருமே பதக்கம் வெல்லவில்லை. இதையடுத்து, அந்த வீரர்களை எலிகளுடன் ஒப்பிட்டு அதிபர் பேசியதாகவும், நாட்டின் பணத்தை அவர்கள் வீண் செய்துவிட்டதாக கோபப்பட்டதாகவும், இதையடுத்து அவர்களை சிறையில் தள்ள உத்தரவிட்டதாகவும் அந்த நாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி உலகம் எங்கும் பரவியது. இந்நிலையி்ல், அந்த செய்தியில் உண்மையில்லை என்று, அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.