என்ன நடக்குது? சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வு அறிவிப்பு.. உத்தப்பாவும் விலகினார்
பெங்களூரு : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ராபின் உத்தப்பா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், தற்போது உத்தப்பாவும் விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக உத்தப்பா கடந்த 2 ஆண்டுகளாக விளையாடினார்.
இதில், 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக உத்தப்பா இருந்தார்.

உத்தப்பா ஓய்வு
இந்த நிலையில், 36 வயதான உத்தப்பா, இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிஎஸ்கே வீரர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக ஓய்வு முடிவை அறிவிப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐபிஎல் தொடரில் உத்தப்பா, சிஎஸ்கே அணியில் இடம்பெற மாட்டார்.

சிஎஸ்கேக்கு நெருக்கடி
இதனால் வேறு ஒரு வீரரை ஒப்பந்தம் செய்ய வேண்டிய நெருக்கடிக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை இந்திய அணி இடம் பிடித்த உத்தப்பா 2006ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2007 50 ஓவர் மற்றும் டி20 உலகக் கோப்பை என இரண்டு தொடரிலும் உத்தப்பா இடம் பிடித்தார்.

உத்தப்பா செயல்பாடு
இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டி மற்றும் 13 டி20 போட்டியில் விளையாடிய உத்தப்பாவுக்கு கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்னை, கொல்கத்தா, ஆர்சிபி, மும்பை, புனே, ராஜஸ்தான் ராயல்ஸ் என 6 ஐபிஎல் அணிகளுக்காக 205 போட்டியில் விளையாடி 4952 ரன்கள் விளாசியுள்ளார்.

ஓய்வுக்கு காரணம்
ரஞ்சி கோப்பை, இராணி கோப்பை, ஐபிஎல் கோப்பை, உலககோப்பை என அனைத்து பட்டங்களையும் வென்றுள்ள உத்தப்பா, தற்போது வெளிநாடுகளில் நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார். இதற்காக தடையில்லா சான்றிதழையும் உத்தப்பா பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள், வெளிநாட்டு தொடரில் விளையாட கூடாது என்ற விதி இருப்பதால், உத்தப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications