சென்னை: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகத்தை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்திய முன்னாள் வீரர்கள் ராபின் உத்தப்பா ஜெர்சி நம்பருக்கு ஓய்வு அளிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். இந்த வெற்றியுடன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும் விராட் கோலியின் ஜெர்சி நம்பரான 18க்கும், ரோகித் சர்மாவின் ஜெர்சி நம்பரான 45க்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று குரல்களை எழுப்பியுள்ளனர். இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருவரும் விளையாடவுள்ள நிலையில், அதற்குள் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோரின் ஜெர்சி நம்பருக்கு மட்டுமே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பெருமை தங்களின் ஹீரோக்களுக்கும் வேண்டும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், இப்படியே ஒவ்வொரு ஜெர்சி நம்பருக்கும் ஓய்வு கொடுத்துவிட்டால், எதிர்காலத்தில் இளம் வீரர்களால் அவர்களுக்கு பிடித்த நம்பரை கூட ஜெர்சியில் எழுத முடியாது.
ஏற்கனவே நம்பர் 10 மற்றும் நம்பர் 7 ஆகிய ஜெர்சி எண்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது. ஒரு இளம் வீரர் நம்பர் 10 அல்லது நம்பர் 7 ஆகியவற்றை ஜெர்சியில் வேண்டுமென்று நினைத்தால் கூட, இனி கிடைக்காது. என்னை பொறுத்தவரை இது சரியான அணுகுமுறை கிடையாது. சில ஐகானிக் நம்பர்களை பிசிசிஐ தக்க வைத்து கொள்ளலாம். ஆனால் இரு இளம் வீரர் அந்த ஜெர்சி எண்ணிற்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்தினால், நிச்சயம் ஐகானிக் ஜெர்சி நம்பரை அளிக்க முன்வர வேண்டும். ராபின் உத்தப்பாவின் வாதத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.