மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மூன்று இளம் வீரர்கள் 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார். அதில் இரண்டு இளம் சிஎஸ்கே வீரர்களை அவர் தவிர்த்து இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் கவனம் பெற்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்சி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த 17 வயதான ஆயுஷ் மத்ரே மற்றும் அதிரடியாக பேட்டிங் செய்த ஊர்வில் பட்டேல், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், ராபின் உத்தப்பா, சிஎஸ்கே வீரர்களை விட்டுவிட்டு, மற்ற மூன்று வீரர்களுக்கும் 2026 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார். இந்திய டி20 அணியில் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்சி ஆகியோர் இடம் பெறுவார்கள். 2026 டி20 உலகக் கோப்பையின் போது அவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றார்.
இவர்கள் மூவரும் துவக்க வீரர்களாக இருக்கும் நிலையில், ஏற்கனவே ஜெயஸ்வால், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியில் துவக்க வீரர்களாக இடம் பெறுவதற்கான போட்டியில் உள்ளனர். அவர்களுடன் அபிஷேக் ஷர்மாவும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், ராபின் உத்தப்பா, எந்த வீரர் உலகக் கோப்பையின் போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரோ அவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். உடல் தகுதி என்பதே உலகக்கோப்பையின் போது அணியில் வாய்ப்பை அளிப்பதற்கான முக்கிய விஷயமாக இருக்கும் எனக் கூறி இருக்கிறார்.
ராபின் உத்தப்பா வைபவ் சூர்யவன்சியின் பெயரையும் சேர்த்து குறிப்பிட்டிருந்தாலும், அவரை இந்திய அணியில் சேர்ப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) புதிதாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வீரர்களுக்கு என சில விதிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, 15 வயதான வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும்.
தற்போது வைபவ் சூர்யவன்சிக்கு 14 வயதுதான் ஆகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடங்கும் முன்னர் அவருக்கு 15 வயதாகி இருக்கும். ஐபிஎல் முடிந்தவுடன் 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கும். எனவே, வைபவ் சூர்யவன்சியை உலகக் கோப்பையில் ஆட வைக்க வேண்டும் என்றால், அவர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடிய அனுபவம் இல்லாமல் தான் பங்கேற்க முடியும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் எத்தனை ரன்கள் சேர்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்:
2025 ஐபிஎல் தொடரில் பிரப்சிம்ரன் சிங் 1749 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 160.
பிரியன்ஷ் ஆர்யா 17 இன்னிங்ஸ்களில் 475 ரன்கள் எடுத்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 179.
வைபவ் சூர்யவன்சி 7 இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 206.5.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆயுஷ் மத்ரே 7 இன்னிங்ஸ்களில் 240 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 189.
சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த ஊர்வில் பட்டேல் மூன்று போட்டிகளில் தான் விளையாடினார். அவர் அதில் 68 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.